தென்காசியில் ராகுல்காந்தி தேர்தல் பிரச்சாரம்

தென்காசி மாவட்டம் ஆலங்குளம், பாவூர்சத்திரம், சுரண்டை ஆகிய பகுதிகளில் ராகுல்காந்தி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.

Update: 2021-02-28 15:38 GMT

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் அகில இந்திய தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல்காந்தி தமிழகத்தின் தென்மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டாவது கட்ட தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார். இன்று அவர் நெல்லையில் பிரச்சாரத்தை முடித்துக் கொண்டு தென்காசி மாவட்டம் சென்ற அவர் செல்லும் வழியில் தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே கரும்புளியூத்து பகுதியில் சாலையோரம் கூடிநின்ற பொதுமக்களை கண்டவுடன் கீழே இறங்கி அவர்களுக்கு கைகுலுக்கினார். பின்னர் ஆலங்குளம் அருகில் சாலையோரம் இருந்த இளநீர் கடையில் திடீரென இறங்கி இளநீர் குடித்தார். அப்போது இளநீர் கடை நடத்தியவரிடம் அவரது குடும்ப சூழ்நிலை குறித்து ராகுல் காந்தி கேட்டறிந்தார். அதைத் தொடர்ந்து ஆலங்குளம் பேருந்து நிலையம் அருகில் சாலையோரம் கூடியிருந்த பொதுமக்கள் மத்தியில் திறந்த வேனில் இருந்தபடி ராகுல் காந்தி பேசுகையில், இந்த பகுதி பீடித் தொழிலாளர்கள் நிறைந்த பகுதி என்பதை நான் அறிவேன். சிறு குறு தொழில்கள் மூலமாக தான் நாட்டில் வேலை வாய்ப்புகள் உருவாகிறது ஆனால் இந்த சிறு குறு தொழில்களுக்கு இன்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது சிறு குறு தொழில் தான் நாட்டின் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் முதுகெலும்பாக உள்ளது.

ஏழை மக்கள் தினசரி வாழ்வாதாரத்திற்கு மிகவும் கஷ்டப்பட்டு வருகிறார்கள். மூன்று வேளாண்மை சட்டங்களை உருவாக்கி பிரதமர் மோடி விவசாயிகளை அழிவுப்பாதைக்கு கொண்டு சென்றுவிட்டார். விவசாயம் சிறு குறு தொழில்கள் ஆகியவைதான் நாட்டை வழிநடத்தும் முக்கிய தொழில்கள் ஆகும். ஆனால் மோடியோ இவைகளை எல்லாம் அழித்து வருகிறார். தமிழகத்தின் கலாச்சாரம் மற்றும் வரலாற்றை மோடி சீரழித்து வருகிறார். ஒரே நாடு, ஒரே மொழி என்று மோடி சொல்லி வருகிறார் நான் கேட்கிறேன், தமிழ் மொழி இந்திய மொழி இல்லையா? தமிழ் வரலாறு இந்திய வரலாறு இல்லையா, தமிழ் கலாச்சாரம் இந்தியாவின் கலாச்சாரம் இல்லையா, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மோடியிடம் சரணடைந்து விட்டார் அவர் ஊழல்வாதியாக இருப்பதால் தன்னை காப்பாற்றிக் கொள்ளவே மோடியிடம் சரணடைந்துள்ளார். தமிழக அரசையும் அதிமுகவையும் ரிமோட் கண்ட்ரோல் போல் அடக்கி ஆள மோடி நினைக்கிறார். அதேபோல் தமிழக மக்களையும் மோடி அடக்கி ஆள நினைக்கிறார். ஆனால் தமிழக மக்களை யாராலும் அடக்க முடியாது. மோடி தமிழக கலாச்சாரத்தையும் தமிழக மக்களையும் மதிக்க வேண்டும். அது போன்ற ஒரு அரசு இங்கு வரவேண்டும் இவ்வாறு ராகுல்காந்தி பேசினார். தொடர்ந்து தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் சுரண்டை ஆகிய பகுதிகளில் ராகுல்காந்தி பிரச்சாரம் மேற்கொண்டார் .

Tags:    

Similar News