மலை போன்ற தீயில் இறங்கிய பக்தர்கள்

Update: 2021-01-20 07:08 GMT

தென்காசி மாவட்டம் அருணாப்பேரி அழகு முத்துமாரியம்மன் கோவில் கொடை விழாவில் மலைபோல் குவித்து வைக்கப்பட்டிருந்த தீயில் பக்தர்கள் பூக்குழி இறங்கினர் .

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள அருணாப்பேரியில் அமைந்துள்ளது அழகு முத்துமாரியம்மன் கோவில். மிகவும் பழைமை வாய்ந்த இந்த கோவிலில் ஆண்டு தோறும் 10 நாட்கள் கொடை விழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டிற்கான கொடை விழா கடந்த 10-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நாள் தோறும் காலை, மாலை இரு வேளையிலும் அம்மனுக்கு சிறப்பு பூஜைகளுடன், சப்பரம் வீதி உலா வரும் நிகழ்வு நடைபெற்றது.

விழாவின் முக்கிய நிகழ்வான பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி இன்று அதிகாலை சுமார் 1.30 மணியளவில் தொடங்கி காலை 5 மணி வரை நடைபெற்றது. மலைபோல் குவித்து வைக்கப்பட்டிருக்கும் நெருப்பில் பக்தர்கள் இறங்கி தங்களது நேர்த்திக் கடனை செலுத்தினர். தற்போது கொரோனா காலம் என்பதால் வெளியூர் பக்தர்களுக்கும், கச்சேரிகளுக்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இருந்த போதிலும் நேற்று நள்ளிரவு தொடங்கி இன்று அதிகாலை வரை நடைபெற்ற பூக்குழி இறங்கும் நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

Similar News