ஐ.டி. ரெய்டுக்கு ஒத்துழைப்பு: மெர்க்கன்டைல் வங்கி தலைமை அறிவிப்பு

ஐ.டி. ரெய்டுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கப்படும் என தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி தலைமை அறிவித்து உள்ளது.

Update: 2023-06-27 15:20 GMT

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி தலைமை அலுவலகம். (கோப்பு படம்).

நூறு ஆண்டுகளை கடந்த பழமையான தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கிக்கு இந்தியா முழுவதும் 21 மாநிலங்களில் 546 கிளைகள் உள்ளன. தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியின் தலைமை அலுவலகம் தூத்துக்குடியில் செயல்பட்டு வருகின்றது. இந்நிலையில், தூத்துக்குடி வி.இ. சாலையில் உள்ள இரண்டு இடத்தில் செயல்பட்டு வரும் தலைமை அலுவலகத்தில் இன்று காலை வழக்கமான வங்கி அலுவல் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன.

அப்போது, தலைமை அலுவலகத்தில் வழக்கமான பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில் மதுரை, நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த மத்திய வருமானத்துறை அதிகாரிகள் 16 பேர் 5 வாகனங்களில் திடீரென தலைமை அலுவலகத்துக்குள் சென்று வருமான வரி தொடர்பான சோதனையில் ஈடுபட்டனர்.

இந்த சோதனை இன்று காலை துவங்கி தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த சோதனை எதற்காக நடைபெறுகின்றது என்று உறுதியான தகவல்கள் எதுவும் கிடைக்கப் பெறாத நிலை உள்ளது. நிதி பரிவர்த்தனை அறிக்கையை முறையாக கணக்கு காட்டாத காரணத்தினால் உயர் அதிகாரிகள் தலைமையில் சோதனை நடைபெறுவதாக கூறப்படுகிறது.

கடந்த நான்கு ஆண்டுகளாக வைப்புத் தொகைக்கு மக்களுக்கு தர வேண்டிய வட்டிகள், பங்கு ஈவுத்தொகையில் குறைபாடுடன் கணக்கு காட்டியதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிர்வாக இயக்குநர் மற்றும் சி.இ.ஓ. கிருஷ்ணன் சுப்பிரமணியன் உள்ளிட்ட நிர்வாகிகளிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

அலுவலகத்திற்கு வருபவர்கள் உள்ளே அனுமதிக்கப்படாமல், வங்கி ஊழியர்கள் மட்டுமே மிகுந்த சோதனைக்கு பிறகு அனுமதிக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுதொடர்பாக தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி தலைமை அலுவலகம் வெளியிட்ட அறிக்கை விவரம் வருமாறு:-

எங்கள் தலைமை அலுவலகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியதில், அதிகாரிகளுக்கு வங்கி நிர்வாகம் முழு ஒத்துழைப்பு அளித்து வருகிறது. அதிகாரிகள் கோரிய விளக்கங்கள் மற்றும் விவரங்களுக்கு பதிலளித்து, தேவையான தகவல்களை தொடர்ந்து வழங்குவோம்.

வங்கியின் வணிகச் செயல்பாடுகள் வழக்கம்போல தொடர்ந்தன. மேலும் சட்டப்பூர்வ நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி வருகிறோம்.

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் தலைமை அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் மேற்கண்டவாறு  தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News