நாளை கூடுகிறது தமிழக சட்டப்பேரவை: காவிரி தீர்மானம் நிறைவேற்ற முடிவு

தமிழக சட்டப்பேரவை கூட்டம் நாளை முதல் தொடங்குகிறது. காவிரி விவகாரம் தொடர்பாக தீர்மானம் நிறைவேற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.

Update: 2023-10-08 06:04 GMT

பைல் படம்.

தமிழக சட்டப்பேரவை கூட்டம் நாளை முதல் தொடங்குகிறது. காவிரி விவகாரம் தொடர்பாக தீர்மானம் நிறைவேற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த ஏப்ரல் மாதம் 21ம் தேதியுடன் முடிவடைந்து, தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்படுவதாக பேரவைத் தலைவர் மு.அப்பாவு அறிவித்தார்.சட்டப்பேரவை ஒத்திவைக்கப்பட்டால் மீண்டும் 6 மாதங்களில் கூட்டப்பட வேண்டும்.

கடந்த மாதம் 20ம் தேதி பேரவைத் தலைவர் அப்பாவு அக்டோபர் 9-ம் தேதி சட்டப்பேரவை கூடுவதாக அறிவித்தார். அதன்படி, சட்டப்பேரவையின் மழைக்கால கூட்டத்தொடர் நாளை காலை 10 மணிக்கு கூடுகிறது.

இந்த பேரவைக்கூட்டத்தில் 2023-24-ம் ஆண்டு கூடுதல் செலவினங்களுக்கான மானிய கோரிக்கையை நிதியமைச்சர் தாக்கல் செய்ய உள்ளார். நாளை தொடங்கி 5 நாட்கள் பேரவைக் கூட்டம் நடைபெறலாம் என்று கூறப்படும் நிலையில், பேரவையை எத்தனை நாட்கள் நடத்துவது என்பதை அலுவல் ஆய்வுக்குழு கூடி முடிவு செய்யும்.

இந்த கூட்டத்தொடரில் காவிரி நீர் மேலாண்மை ஆணைய உத்தரவின்படி தண்ணீர் திறந்துவிட கர்நாடக அரசுக்கு மத்திய அரசு உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தி அனைத்துக் கட்சி ஆதரவுடன் தீர்மானம் நிறைவேற்ற தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Tags:    

Similar News