ஆதார் கார்டு போல 'மக்கள் ஐடி' வழங்க தமிழக அரசு திட்டம்

தமிழ்நாட்டில் வசிப்பவர்களுக்கு 10 முதல் 12 இலக்கங்கள் உள்ள 'மக்கள் ஐடி' அளிக்கப்படவுள்ளது.

Update: 2022-12-27 11:22 GMT

மத்திய அரசின் ஆதார் கார்டை போலவே தமிழகத்தில் வசிக்கும் மக்களுக்கு 'மக்கள் ஐடி' என்ற அடையாள அட்டை வழங்கப்படவுள்ளது.

ஆதார் அடையாள அட்டை என்பது இந்தியாவில் குறைந்தது 182 நாட்கள் வசித்த ஒருவருக்கு வழங்கப்பட்டு வரும் 12 இலக்க அடையாள எண் தாங்கிய அட்டை ஆகும். உலகின் இரண்டாவது பெரிய மக்கள் தொகை நாடான இந்தியாவில், நாட்டின் அனைத்து குடிமக்களுக்கும் தனித்தனி அடையாள எண் வழங்குவதன் மூலம் நாடுதழுவிய குடிமக்கள் தரவுத்தளத்தை உருவாக்குவதே ஆதார் அடையாள எண் முறையின் முதல் நோக்கம்.

இந்த அடையாள அட்டையில் கண்ணின் விழித்திரை, கைரேகை போன்ற உயிரியளவுகளும், இவற்றுடன் சேர்த்து பெயர், முகவரி, பிற சுய குறிப்புகளும், புள்ளி விவரங்களும் உள்ளீடு செய்யப்படும். 12 இலக்க எண் ஒரு முறை ஒருவருக்கு வழங்கப்பட்டு விட்டால் வாழ்நாள் முழுவதும் அது அவருக்குரியதே. வேறு யாருக்கும் அந்த எண் வழங்கப்படாமாட்டாது.

இந்த நிலையில், ஆதார் கார்டை போலவே தமிழகத்தில் வசிக்கும் மக்களுக்கு 'மக்கள் ஐடி' என்ற பெயரில் அடையாள அட்டையை வழங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இது 10 முதல் 12 இலக்கங்களில் இருக்கும். தமிழ்நாடு மின் ஆளுமை முகமை மூலம் மாநில குடும்ப தரவுதளம் ஒன்று உருவாக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அடையாள எண் வழங்க மென்பொருள் தயாரிப்பதற்கு டெண்டர் விடுக்கப்பட்டுள்ளது. மென்பொருள் தயாரானதும் சில மாதங்களில் அடுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

மென்பொருள் நிறுவனம் தயாரித்து வழங்கக்கூடிய தளம் ஒருசில மாதங்களில் பயன்பாட்டுக்குவரும் எனவும், பின்னர் மக்கள் தொகை கணக்கெடுப்பின் மூலம் ஆதாரை போன்று கண் விழித்திரை, கைரேகை உள்ளிட்டவற்றை கொண்டு இந்த மக்கள் ஐடி வழங்கப்படும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

Tags:    

Similar News