தமிழக பட்ஜெட் கட்டிட தொழிலாளர்களுக்கு ஏமாற்றம்: ஏ.ஐ.டி.யு.சி. கருத்து

தமிழக பட்ஜெட் கட்டிட தொழிலாளர்களுக்கு ஏமாற்றம் அளிக்கிறது என ஏ.ஐ.டி.யு.சி. சார்பில் கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2023-03-20 16:17 GMT

தமிழக பட்ஜெட் ஏமாற்றம் அளிக்கிறது என  தமிழ்நாடு ஏ.ஐ.டி.யூ.சி. கட்டிடத் தொழிலாளர் சங்கம் தீர்மானம் நிறைவேற்றி உள்ளது.

தமிழ்நாடு ஏ.ஐ.டி.யூ.சி. கட்டிட தொழிலாளர் சங்கத்தின் மாநில நிர்வாக குழு கூட்டம் இன்று மார்ச் 20 காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை திருச்சி பெரிய மிளகு பாறையில் மாநில தலைவர் கே.இரவி தலைமையில் நடைபெற்றது. அதில் தமிழக பட்ஜெட் ஏமாற்றம் அளிப்பதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இது சம்பந்தமாக மாநில பொதுச் செயலாளர் என். செல்வராஜ் தெரிவித்ததாவது:-

இந்த பட்ஜெட்டில் கட்டிட தொழிலாளர்களின் நீண்ட நாள் கோரிக்கைகள் குறித்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இது கட்டுமான தொழிலாளர்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளித்துள்ளது. கட்டுமான தொழிலாளர்களுக்கு மருத்துவ வசதியும், விபத்து சிகிச்சையும், சிகிச்சைக்கான பாதுகாப்பும் வேலையில்லா காலத்திற்கு நிவாரணமும் வழங்கப்பட வேண்டும்.

1994 ஆம் ஆண்டு நலவாரியம் தொடங்கப்பட்டபோது இ.எஸ்.ஐ. மற்றும் பிராவிடண்ட் பண்ட் திட்டங்கள் அமல்படுத்துதல் வாரியத்தின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாக அறிவிக்கப்பட்டது. ஆனால் அது இதுவரை நிறைவேற்றப்படவில்லை.

பெண் தொழிலாளர்கள் 60 வயதை எட்டுவதற்கு முன்பாகவே மிகவும் தளர்ந்து விடுகிறார்கள். எனவே, அவர்கள் ஓய்வு பெறும் வயதை 50 என அறிவிக்க வேண்டும்.

60 வயது நிறைவடைந்த கட்டுமான தொழிலாளிக்கு மாதம் ரூபாய் 1000 மட்டுமே ஓய்வூதியமாக வழங்கப்படுகிறது. முதுமை காலத்தில் மருத்துவ செலவிற்கே இது போதுமானதாக இருக்காது. எனவே, ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும்.

அரசுத் துறையில் பணிபுரியும் பெண் தொழிலாளர்களுக்கு பிரசவகால விடுப்பு ஆறு மாத காலம் சம்பளத்துடன் வழங்கப்படுவது போல, கட்டுமான தொழிலில் உள்ள பெண் தொழிலாளர்களுக்கு மகப்பேறு கால விடுப்பு ஆறு மாத காலத்திற்கு சம்பளத்துடன் வழங்க வேண்டும். இந்த நிவாரணம் அரசு தீர்மானித்துள்ள குறைந்தமாத சம்பளம் ரூ21,000 என கணக்கிட்டு ரூ. 1.26 லட்சம் வழங்கப்பட வேண்டும்.

கட்டுமான தொழிலாளர்கள் பண பலன்களுக்காக விண்ணப்பிக்கும் போது, அதிகாரிகள் தேவையற்ற பல்வேறு காரணங்களை கூறி விண்ணப்பங்களை நிராகரிக்கக் கூடாது என்பன உள்ளிட்ட கட்டுமான தொழிலாளர்களின் கோரிக்கை நீண்ட காலமாக முன்வைக்கப்பட்டு போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த எட்டாம் தேதி தமிழக முழுவதும் கிராம நிர்வாக அலுவலர்கள் மூலமாக மாநில முதல்வருக்கு கோரிக்கை மனுக்கள் கொடுக்கப்பட்டுள்ளது. இவை சம்பந்தமாக பட்ஜெட்டில் எதுவும் தெரிவிக்கப்படாதது மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது. என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்தக் கூட்டத்தில் தமிழ்நாடு ஏ.ஐ.டி.யூ.சி. யின் பொதுச் செயலாளர் எம். ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

கட்டிட தொழிலாளர் சங்கத்தின் மாநில துணை பொது செயலாளர் சேலம் முனுசாமி, மாநில செயலாளர்கள் அம்பத்தூர் ஆர்.துரைசாமி, ஈரோடு எஸ்.சின்னசாமி, தூத்துக்குடி சேது, திண்டுக்கல் பாண்டியன், கோயமுத்தூர் சி.நந்தினி, மாநில துணைத்தலைவர்கள் கோயமுத்தூர் ஆர்.பாலகிருஷ்ணன், திருச்சி மாமன்ற உறுப்பினரும் சங்கத்தின் மாநில துணைத்தலைவருமான க.சுரேஷ். கரூர் வடிவேல், வேலூர் சங்கர் மேஸ்திரி, மாநில பொருளாளர் இரா.முருகன் மற்றும் மாவட்ட செயலாளர்கள் கலந்து கொண்டார்கள். இறுதியாக  செல்வகுமார் நன்றி கூறினார்.

Tags:    

Similar News