ரயில்களின் வேகத்தை அதிகரிக்க தெற்கு ரயில்வே திட்டம்

பயண நேரத்தை குறைக்கும் வகையில் தமிழ்நாட்டில் முக்கிய ரயில்களின் வேகம் அதிகரிக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

Update: 2023-02-02 06:53 GMT

தமிழகத்தில் உள்ள ரயில் வழித்தடங்களில் ரயிலின் வேகத்தை அதிகரித்து, பயண நேரத்தை குறைக்க தெற்கு ரயில்வே நிர்வாகம் தீவிர முயற்சி எடுத்து வருகிறது. இதற்காக, ரயில் தண்டவாளங்கள் மற்றும் சிக்னல் முறையை மேம்படுத்துதல், வேகக் கட்டுப்பாடுகளை அகற்றுதல், பாலங்களை சீரமைத்தல், மேம்பாலம் மற்றும் சுரங்கம் கட்டுமானப் பணிகளை மேற்கொள்ளுதல் போன்ற பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.

ஏற்கனவே சென்னை சென்ட்ரல் - கூடூர், சென்னை சென்ட்ரல் - அத்திப்பட்டு, சென்னை - அரக்கோணம் - ரேணிகுண்டா ஆகிய வழித்தடங்களில் சமீபத்தில் அடுத்தடுத்து சோதனை ஓட்டங்கள் நடத்தப்பட்டன. அதிகபட்சமாக ரூ. 145 கி.மீ வேகம் வரை ரயில் இன்ஜினை இயக்கி சோதனை செய்யப்பட்டது.

இதனையடுத்து இந்த நிதி ஆண்டில் சென்னை - கூடூர், சென்னை - ரேணிகுண்டா ஆகிய 2 வழித்தடங்களில் 130 கி.மீ. வேகம் வரை ரயிலின் வேகத்தை அதிகரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், தஞ்சாவூர் - பொன்மலை, விருத்தாசலம் - சேலம், விழுப்புரம் - புதுச்சேரி, மதுரை-திருநெல்வேலி, விழுப்புரம் - காட்பாடி, அரக்கோணம் - செங்கல்பட்டு, திருநெல்வேலி - தென்காசி, திருநெல்வேலி - திருச்செந்தூர், தஞ்சாவூர் - நாகர்கோவில் ஆகிய 9 வழித்தடங்களிலும் 110 கி.மீ. வரை ரயிலின் வேகத்தை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், சென்னையிலிருந்து ஜோலார்பேட்டை, பெங்களூர், மும்பை உள்ளிட்ட வழித்தடங்களில் செல்லும் ரயில்களின் வேகத்தை அதிகரிக்க திட்ட அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கு ஒப்புதல் கிடைத்த பின்னர் ரயில்களின் வேகம் அதிகரிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிப்ரவரி மாதம் முதல் சென்னை - பெங்களூரு வழித்தடத்தில் ரயில்கள் 160 கி.மீ வேகத்தில் இயக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி தண்டவாள வளைவுகளை சீர்படுத்துவது, ரயில் பாதைகளில் பொதுமக்கள் அனுமதியின்றி கடக்கும் இடங்களில் தடுப்புகள் அமைப்பது உள்ளிட்ட மேம்பாட்டு பணிகள் செய்யப்பட்டு வருகின்றன. அத்துடன், ரயில்களில் எல்எச்பி எனும் நவீன பெட்டிகள் இணைக்கப்படுவதால், ரயில்களின் வேகம் அதிகரித்துள்ளது.

Tags:    

Similar News