பென்னி குக்கை தெரியும். ஆர்தர் காட்டன் என்பவரை தெரியுமா?

டெல்டா பாசனத்தை வடிவமைத்தவர், தமிழ்நாட்டில் மட்டுமல்ல ஆந்திராவையும் வளப்படுத்த அடித்தளம் அமைத்தவர், பொறியாளர்கள் கொண்டாடும் பொறியாளர்

Update: 2022-05-15 02:35 GMT

ஆந்திராவில் அமைக்கப்பட்டுள்ள சர் ஆர்தர் காட்டன் சிலை

பிரிட்டிஷ் பொறியாளர் மற்றும் படைத்தளபதி சர் ஆர்தர் காட்டன், இந்தியாவில் நீர்ப்பாசன வசதி செய்துதரவும், கால்வாய்களை அமைப்பதிலும் தனது வாழ்க்கை முழுவதையும் அர்ப்பணித்தவர். இவர் இந்திய நீர்ப் பாசனத்தின் தந்தை என அழைக்கப்படுகிறார்

சர் ஆர்தர் காட்டன் இங்கிலாந்து நாட்டில் செஸ்ஷைரில் ஹென்றி கால்வெலி காட்டனுக்கு 1803ம் ஆண்டு மே 15ம் தேதி பத்தாவது மகனாக பிறந்தார். பொறியியலில் ஆர்வம் கொண்ட அவர் தனது 15 வது வயதில் கிழக்கிந்திய கம்பெனியின் பொறியியல் பிரிவில் சேர்ந்தார்.

1821ம் ஆண்டு சென்னையில் உள்ள தலைமைப் பொறியாளர் அலுவலகத்தில் உதவியாளராக பணியில் சேர்ந்த அவர், 1822ம் ஆண்டு ஏரி பராமரிப்பு துறையில் கண்காணிப்புப் பொறியாளர்களுக்கு உதவியாளராக பணி நியமனம் செய்யபட்டார். இதன் மூலம் கோவை, மதுரை, திருநெல்வேலி, தஞ்சை மாவட்டங்களில் உள்ள ஏரி, கண்மாய், குளங்களைப் பராமரித்து நீர் விநியோகம் செய்யும் பணி வாய்ப்பு காட்டனுக்கு கிடைத்தது.

1829ல் காவிரி பாசனப் பகுதிக்கு தனிப் பொறுப்பாளராக நியமித்தது ஆங்கிலேய அரசு. மணல் மேடுகளால் நீரோட்டம் தடைப்பட்டு பயனற்று இருந்த கல்லணையைத் சிறு பகுதியைப் பிரித்து எடுத்து மணல் போக்கிகளை அமைத்தார். காவிரியின் கிளை ஆறுகளின் பாசன அமைப்புகளை ஒழுங்குபடுத்தினார். இதனால் அவரை டிசைனர் ஆப் டெல்டா, ஆர்க்கிடெக் ஆப் டெல்டா என்றும் அழைக்கின்றனர்


கல்லணையின் அடித்தளத்தைக் கண்டு வியந்த அவர் பழந்தமிழரின் அணை கட்டும் திறன் மற்றும் பாசன மேலாண்மையை உலகுக்கு எடுத்துக் கூறினார். கல்லணைக்கு 'கிரான்ட் அணைகட்' என்ற பெயரையும் சூட்டினார்.

ஆழம் காண முடியாத மணற்படுகையில் எவ்வாறு அடித்தளம் அமைப்பது என்ற நுட்பத்தைத் தமிழர்களிடம் அறிந்து கொண்டோம். இதை கொண்டு பாலங்களும், அணைக்கட்டுகளும் போன்ற நீரியல் கட்டுமானங்களைக் கட்டினோம். எனவே, இந்த மகத்தான சாதனையைப் புரிந்த அந்நாளைய மக்களுக்கு நாம் கடமைப்பட்டுள்ளோம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்

1840ம் ஆண்டு கல்லணை மேல் பாலத்தை கட்டியதும் அவர்தான் கல்லணையை முன்மாதிரியாகக் கொண்டு காவிரியும், கொள்ளிடமும் பிரியும் இடமான முக்கொம்புவிற்கு வரும் தண்ணீர் நேராகக் கடலில் கலந்து வீணாகிக் கொண்டிருந்ததைத் தடுக்க 1836ம் ஆண்டு கொள்ளிடத்தில் தடுப்பணையைக் (மேலணை) கட்டினர். இதன் மூலம், காவிரி நீர் கொள்ளிடத்தில் செல்வது தடுக்கப்பட்டது. மேலும், வெள்ளக் காலத்தில் உபரி நீரைக் கொள்ளிடத்தில் விடுவதற்கு அந்த அணை பயன்படுகிறது.

கொள்ளிடம் கதவணையில் திறக்கப்படும் தண்ணீர் முழுவதும் கடலுக்கு சென்று வீணாகி விடக்கூடாது என்பதற்காக, 1840ல் ஆண்டு சிதம்பரம் அருகே அணைக்கரை பகுதியில் முக்கொம்பு போலவே ஒரு கதவணை கட்டினார்.

இங்கு தேக்கப்படும் தண்ணீர் வடக்கு ராஜன் வாய்க்கால், தெற்கு ராஜன் வாய்க்கால் பாசனத்திற்கு செல்கிறது. வடவாறு மூலம் வீராணம் ஏரிக்கு சென்று இன்றைக்கும் சென்னை மக்களின் தாகம் தீர்த்து வருகிறது. அணைக்கரை கதவணை மூலம் 1.40 லட்சம் ஏக்கர் பாசனம் பெறுகிறது. இதனால் தண்ணீர் வீணாகி கடலில் சென்று கலக்காமல் வீராணம் ஏரிக்குக் சென்று அங்கு பல்லாயிரகணக்கான ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

வெண்ணாறு, வெட்டாறு முதலியவற்றில் தண்ணீர் முழவதும் பாசனத்துக்கு பயன்படும் வகையில் திட்டங்களை வகுத்த காட்டன், அடுத்ததாக மேட்டூரில் அணை கட்டுவதற்கான முயற்சியை மேற்கொண்டார். இதற்கான அனுமதி பெற சர் ஆர்தர் காட்டன் மைசூர் சமஸ்தானத்துக்கு 1835ல் சென்றார் ஆனால் அவரது கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. இதனால் அம்முயற்சி தடைபட்டது. அவரது காலத்துக்கு பிறகு 1925 ஆம் ஆண்டு அவரது கோரிக்கை செயல்வடிவம் பெற்று 9 ஆண்டுகால கட்டுமானத்துக்கு பின் 1934 ல் மேட்டூரில் அணை கட்டி முடிக்கப்பட்டது.

தமிழகத்தை போல் ஆந்திரா மாநிலத்தில் கிருஷ்ணா நதியில் விஜயவாடாவிலும், கோதாவரி நதியில் தவளேஸ்வரத்திலும் அணைகளைக் கட்டினார். ஆந்திரா பூமியை செல்வம் கொழிக்கும் மாநிலமாக மாற்றியவர் சர் ஆர்தர் காட்டன் என்றால் மிகை ஆகாது.

கிருஷ்ணா நதியின் குறுக்கே விஜயவாடாவிலும், கோதாவரியின் குறுக்கே தவளேஸ்வரம் எனும் இடத்திலும் 1873ம் ஆண்டு அணைகளைக் கட்டினார். இதன் மூலம் 10 லட்சம் ஏக்கர் பாசனம் பெறுகிறது. இந்த கட்டுமானத்தை கல்லணையை அடிப்படையாக கொண்டு கட்டியது என்று அவரே குறிப்பிட்டுள்ளார்

ராஜமுந்த்ரியில் உள்ள ஆர்தர் காட்டன் அருங்காட்சியகம்

ஆந்திராவையும், தமிழகத்தையும் வளமான பகுதிகளாக மாற்ற தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்த காட்டனுக்கு ஆந்திர மாநிலத்தில் ஆயிரக்கணக்கான சிலைகளும் தமிழகத்தில் கல்லணையில் ஒரு சிலையும் வைக்கப்பட்டுள்ளது

மேட்டூர் அணைக்கு மட்டுமல்ல முல்லைப் பெரியாறு அணைக்கும் முதலில் வரைவுத் திட்டத்தை அளித்தவரும் இவர்தான். எனவே அவரது பணிகளையும் பயன்களையும் எதிர்கால சந்ததிகளும் அறியும் வகையில் அவரது பிறந்த நாளை அணைகள் பாதுகாப்பு தினமாக அறிவித்து, அரசு விழாவாக நடத்த வேண்டும்

Tags:    

Similar News