விஜயகாந்த் மறைவையொட்டி சீர்காழி, ஆடுதுறையில் இன்று கடையடைப்பு

விஜயகாந்த் மறைவையொட்டி சீர்காழி மற்றும் ஆடுதுறையில் இன்று கடையடைப்பு செய்யப்பட்டுள்ளது.

Update: 2023-12-29 04:49 GMT

பைல் படம்

விஜயகாந்த் மறைவையொட்டி சீர்காழி மற்றும் தஞ்சை மாவட்டத்தின் ஆடுதுறையில் வியாபாரிகள் கடையடைத்து தங்கள் இரங்கலை தெரிவிப்பதாக அறிவித்துள்ளனர்.

நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்திற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், அவருக்கு சுவாசக் கோளாறு இருப்பதால் வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வருவதாகவும் தேமுதிக தலைமையகம் நேற்று காலை அறிவித்திருந்தது.

இதனை தொடர்ந்து நேற்று காலை 9:30 மணி அளவில் விஜயகாந்த் உயிரிழந்ததாக மருத்துவமனையின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியது.

தமிழ்த் திரைப்பட துறையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் கொடி கட்டி பறந்த நிலையில், இதனைத்தொடர்ந்து அவர் அரசியலில் காலூன்றி வெற்றியும் பெற்றார். பின்னர் எதிர்க்கட்சித் தலைவர் வரை பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் 2006ம் ஆண்டு முதல் 2016ம் ஆண்டு வரை தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராகவும், 2011ம் ஆண்டு முதல் 2016ம் ஆண்டு வரை சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராகவும் பதவி வகித்துள்ளார்.

இவரின் உடல் சாலி கிராமத்தில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, பின்னர் கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. அங்கு அவரது  உடலுக்கு திரைப் பிரபலங்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

நேற்று மக்கள் கூட்டம் அலைமோதிய நிலை், விஜயகாந்த் உடல் இன்று பொதுமக்களின் பார்வைக்காக சென்னை தீவுத் திடலில் வைக்கப்படுவதாக தேமுதிக சார்பில் அறிவிக்கப்பட்டது. இன்று அதிகாலை 4மணி அளவில் தேமுதிக அலுவலகத்திலிருந்து தீவுத் திடலுக்கு சாலை மார்க்கமாக கொண்டு வருகின்றனர்.

ஊர்வலமாக கொண்டு வரப்படும் விஜயகாந்த் உடலை பார்த்து “கேப்டன் .. கேப்டன்” என கதறிய அழுதவாறு பொதுமக்களும் , தொண்டர்களும் அவரை பின் தொடர்கின்றனர். இந்த நிலையில் காலை 6மணி அளவில் விஜயகாந்தின் உடல் தீவுத் திடலுக்கு வந்தடைந்தது. இன்று பிற்பகல் 1மணி வரை பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டது.

பொதுமக்களின் அஞ்சலிக்கு பிறகு இன்று மாலை 4:45மணிக்கு அரசு மரியாதையுடன் தேமுதிக அலுவலகத்தில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.

இந்நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைவையொட்டி இரங்கல் தெரிவிக்கும் வகையில் சீர்காழி நகர வர்த்தக சங்கம் சார்பில் இன்று மாலை 6 மணி வரை கடையடைப்பு செய்து அஞ்சலி செலுத்தப்படுகிறது. அதேபோல தஞ்சை மாவட்டம் ஆடுதுறையில் பகல் 12.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை கடைகள் அடைத்து வணிகர்கள் தங்களது இரங்கலை தெரிவிக்கின்றனர்.

Tags:    

Similar News