உலக அளவில் பங்குச்சந்தைகளில் கடும் சரிவு: காரணம் என்ன?

அமெரிக்க டாலர் மதிப்பு அதிகரிப்பு, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய வங்கிகளின் வீழ்ச்சி உள்ளிட்ட 5 காரணிகளை பார்க்கலாம்.

Update: 2023-03-21 10:45 GMT

பைல் படம்.

வாரத்தின் முதல் நாளான நேற்று இந்திய பங்குச்சந்தைகளில் வர்த்தகமானது, தொடக்கம் முதலே கடும் சரிவுடன் காணப்பட்டது. வர்த்தக நேர முடிவில், மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீட்டு எண் 360 புள்ளிகள் குறைந்து. 57 ஆயிரத்து 628 ஆகவும், தேசிய பங்குச்சந்தையின் நிப்டி குறியீட்டு எண் 111 புள்ளிகள் குறைந்து 16 ஆயிரத்து 988 புள்ளிகளாக இருந்தது. நேற்று ஒரு நாள் வர்த்தகத்தில் மட்டும் சென்செக்ஸ் 900 புள்ளிகள் சரிந்துள்ளது.

பங்குச்சந்தையில், ஏற்பட்ட கடும் சரிவுக்கு 5 முக்கிய காரணிகள்:

அமெரிக்காவில் சில்வர் கேட், சிலிக்கான் வேலி, சிக்னேச்சர் ஆகிய வங்கிகள் எதிர்பாராவிதமாக திவாலானதாக அறிவிக்கப்பட்டது. திவால் நிலைக்கு சென்ற பர்ஸ்ட் ரிபப்ளிக் வங்கியை – பேங்க் ஆப் அமெரிக்கா உள்ளிட்ட 11 வங்கிகள் இணைந்து, இரண்டரை லட்சம் கோடி ரூபாய் நிதி முதலீடு செய்து அவ்வங்கியை காப்பாற்றின.

ஆனாலும் அமெரிக்க டாலர் மதிப்பு அதிகரிப்பு, அமெரிக்க மத்திய வங்கியான பெடரல் ரிசர்வ் -ன் கடனுக்கான வட்டி விகித அதிகரிப்பு அமெரிக்காவை மட்டுமின்றி உலக நாடுகளின் பொருளாதாரத்தில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்க வங்கிகளை தொடர்ந்து, சிக்கலில் இருந்த கிரெடிட் சூயிஸ் வங்கிக்கு, சுவிஸ் மத்திய வங்கி 50 பில்லியன் பிராங்க் வழங்கியும் இயல்பு நிலைக்கு திரும்பவில்லை. கிரெடிட் சூயிஸ் வங்கியை, யூபிஎஸ் வங்கி 3 பில்லியன் பிராங்க் தொகைக்கு வாங்க ஒப்பந்தம் செய்யப்பட்டது. ஆனாலும் நிலைமை சீராகவில்லை.

இந்நிலையில் இந்திய சந்தைகளானது, அமெரிக்க மற்றும் ஐரோப்பிய வங்கிகளின் வீழ்ச்சி, அமெரிக்க டாலர் மதிப்பு, அமெரிக்க பெடரல் வட்டி விகித உயர்வு மற்றும் அதானி குழும நிறுவன பங்குகளின் தொடர் சரிவு என பல்வேறு காரணிகளால் இந்திய பங்குச் சந்தைகள் மற்றும் உலக பங்கு சந்தையும் கடும் சரிவை சந்தித்தன.

Tags:    

Similar News