கலாஷேத்ரா பாலியல் புகார். உதவிப் பேராசிரியர் மீது வழக்குப் பதிவு

கலாஷேத்ரா பாலியல் புகார் தொடர்பாக உதவிப் பேராசிரியர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டதை அடுத்து மாணவர்கள் போராட்டம் முடிவுக்கு வந்தது

Update: 2023-04-01 04:18 GMT

திருவான்மியூரில் கலாஷேத்ரா அறக்கட்டளையின் கீழ் செயல்படும், ருக்மிணி தேவி கவின் கலைக் கல்லூரியில் நடனம் உள்ளிட்ட கலைகள் பயிற்றுவிக்கப்படுகின்றன. இங்கு, மாணவியருக்கு பேராசிரியர் பாலியல் ரீதியான தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்துள்ளது.

புகாரின் அடிப்படையில், விசாரணை குறித்து தமிழக டிஜிபிக்கு அனுப்பிய நோட்டீஸை தேசிய மகளிர் ஆணையம் திரும்பப் பெற்றது. அதன் பின்னர், கல்லூரியில் திடீர் விசாரணை மேற்கொள்ளப்பட்டு, பாலியல் துன்புறுத்தல் ஏதும் நடைபெறவில்லை என தேசிய மகளிர் ஆணைய குழு அறிக்கை அளித்தது.

இதனையடுத்து குற்றம்சாட்டப்பட்ட பேராசிரியர் மீது நடவடிக்கை எடுப்பதில் அலட்சியம் காட்டப்படுவதாகக் கூறி, கல்லூரி வளாகத்தில் மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக 90 மாணவிகள் நேற்று மாநில மகளிர் ஆணைய தலைவரிடம் புகார் அளித்த. தவறு செய்தவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் உறுதியளித்துள்ளார்.

இதனிடையே ருக்மணி தேவி கவின் கலைக் கல்லூரிக்கு ஏப்ரல் 6-ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக அடையாறு அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் உதவி பேராசிரியர் ஹரி பத்மன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் மீது பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம், பெண்ணின் மாண்பிற்கு குந்தகம் விளைவித்தல், கொலை மிரட்டல் விடுத்தல் ஆகிய 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து தங்களின் போராட்டத்தை வாபஸ் பெறுவதாக கலாஷேத்ரா மாணவர்கள் அறிவித்தனர்.

Tags:    

Similar News