செந்தில் பாலாஜி வழக்கில் நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு

ஆட்கொணர்வு மனு மீதான விசாரணை நீதிபதிகள் நிஷா பானு, பரத சக்கரவர்த்தி ஆகியோர் முன்னிலையில் நடந்தது.

Update: 2023-07-04 05:28 GMT

சட்ட விரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் அமலாக்க துறையால் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். தற்போது அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரை அமலாக்கத்துறை அதிகாரிகள் சட்ட விரோத காவலில் வைத்ததாக கூறி செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா சென்னை ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் நிஷா பானு, பரத சக்கரவர்த்தி ஆகியோர் முன்னிலையில் நடந்தது. இரு தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் இந்த மனு மீதான தீர்ப்பு இன்று வழங்கப்பட்டது. அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்தது சட்டவிரோதம் என நீதிபதி நிஷா பானுவும், நீதிமன்ற காவல் சட்டவிரோதமில்லை என்று நீதிபதி பரத சக்ரவர்த்தியும் மாறுபட்ட தீர்ப்பை கூறியுள்ளனர்.

அமைச்சர் செந்தில்பாலாஜி, கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் 2011-ம் ஆண்டு முதல், 2015 வரை போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தார். அப்போது போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி, 81 போிடம் பணம் பெற்று, ரூ.1.62 கோடி மோசடி செய்ததாக புகார் எழுந்தது.

இது தொடர்பாக கொடுக்கப்பட்ட புகார் அடிப்படையில், 2018-ம் ஆண்டு மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் மோசடி சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். முன்ஜாமீன் பெற்றதால் அவரை கைது செய்யவில்லை. அவர் அப்போது வழக்கு விசாரணைக்காக சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறை முன்னிலையில் ஆஜர் ஆனார்.

இந்த வழக்கு நிலுவையில் இருந்த நிலையில், பாதிக்கப்பட்டவர்களுக்கு பணம் திரும்ப கொடுக்கப்பட்டதாகவும், இதனால் இந்த வழக்கை முடித்து வைக்க வேண்டும், என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதை ஏற்று செந்தில்பாலாஜி உள்ளிட்ட இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீதான வழக்கு ரத்து செய்யப்பட்டது.

ஆனால் இந்த வழக்கை ரத்து செய்யக்கூடாது என்றும், லஞ்ச ஒழிப்பு சட்டப்பிரிவின் கீழ் புதிதாக வழக்குப்பதிவு செய்து விசாரிக்க வேண்டும் என்றும், 2 மாதத்தில் விசாரணையை முடித்து, அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும், உச்சநீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டது.

மேலும் முறைகேடாக பணபரிமாற்றத்தில் ஈடுபட்டதாக செந்தில் பாலாஜி, அவரது தம்பி அசோக்குமார் உள்ளிட்டவர்கள் மீது அமலாக்கத்துறையும் தனியாக வழக்குப்பதிவு செய்தது. இதையடுத்து வருமானவரித்துறை சோதனை, அமலாக்கத்துறை சோதனை நடவடிக்கைகளை தொடர்ந்து அமைச்சர் செந்தில்பாலாஜி கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்டபோது மயங்கி விழுந்தார். பின்னர் இருதயத்தில் ரத்தக் குழாயில் அடைப்பு இருப்பது தெரிய வந்ததால், பைபாஸ் அறுவை சிகிச்சை செய்து கொண்டு அமைச்சர் செந்தில்பாலாஜி சென்னை காவேரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். அமலாக்கத்துறை வழக்கில் கைது செய்யப்பட்ட அவர் நீதிமன்ற காவலில் தற்போது உள்ளார்.

இதனிடையே அமலாக்கத்துறை அதிகாரிகள் சட்ட விரோத காவலில் வைத்ததாக கூறி செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் நிஷா பானு, பரத சக்கரவர்த்தி ஆகியோர் முன்னிலையில் நடந்தது. இரு தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் இந்த மனு மீதான தீர்ப்பு தள்ளிவைக்கப்பட்டது.

ல் மேகலா தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு மீது இன்று (செவ்வாய்க்கிழமை) தீர்ப்பு வழங்கப்படும் என ஐகோர்ட்டு அறிவித்திருந்தது. இந்நிலையில் அமைச்சர் செந்தில்பாலாஜி வழக்கில் இரு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பினை வழங்கி உள்ளனர். ஆட்கொணர்வு மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொள்வதாகவும், அவரை அமைச்சர் செந்தில் பாலாஜியை விடுவிக்கலாம் என்றும் நீதிபதி நிஷா பானு தெரிவித்தார். ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு உகந்ததல்ல என்று நீதிபதி பரத சக்கரவர்த்தி தெரிவித்தார்.

Tags:    

Similar News