தமிழகம் முழுவதும் 30 இடங்களில் சோதனை: என்.ஐ.ஏ அதிகாரிகள் அதிரடி
தமிழகம் முழுவதும் 30 இடங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.;
கோவையில் நடைபெற்று வரும் என்ஐஏ சோதனை.
கோவை உள்ளிட்ட தமிழகம் முழுவதும் என்.ஐ.ஏ அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். கோவையில் கார் வெடிகுண்டு விபத்தில் உயிரிழந்த ஜமேஷா முபினின் உடன் பயின்றவர்கள் வீடுகளில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது.
கடந்த ஆண்டு அக்டோபர் 23ம் தேதி கோவை கோட்டைமேடு சங்கமேஸ்வரர் ஆலயம் முன்பு கார் ஒன்று வெடித்து தீப்பிடித்து எரிந்ததில் ஒருவர் உயிரிழந்தார். முதலில் விபத்து எனக் கருதப்பட்ட நிலையில், இந்த சம்பவத்தில் உயிரிழந்த ஜமேஷா முபின் என்பவரது பின்னணியில் சதித்திட்டமாக இருக்கலாம் என சந்தேகத்தை எழுப்பியது.
இதனையடுத்து ஜமேஷா முபின் வீட்டை சோதனையிட்ட போது காவல் துறையினர் 75 கிலோ வெடிமருந்துகள், சில சந்தேகத்திற்குரிய ஆவணங்கள் மற்றும் குறிப்புகளை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். இவ்வழக்கில் தொடர்புடைய உக்கடம் பகுதியைச் சேர்ந்த முகமது தல்கா முகமது அசாருதீன், முகமது ரியாஸ், பெரோஸ் இஸ்மாயில், முகமது நவாஸ் இஸ்மாயில், அப்சர்கான் ஆகியோரை காவல் துறையினர் கைது செய்தனர்.
இந்த கார் வெடிப்பு தொடர்பாக காவல் துறையினர் நடத்திய புலன் விசாரணை முடிக்கப்பட்டு, தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளிடம் இவ்வழக்கு ஒப்படைக்கப்பட்டது. மேலும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளுக்கு உதவ 2 ஆய்வாளர்கள், 4 உதவி ஆய்வாளர்கள் உள்ளிட்ட காவல் துறையினர் நியமிக்கப்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விசாரணையில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் நடத்திய விசாரணையில் ஜமேஷா முபின் ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கத்தால் ஈர்க்கப்பட்டவர்.முபின் ஒரு மதத்தை மட்டும் குறிவைத்து, நினைவுச் சின்னங்கள் மீது தற்கொலைப்படை தாக்குதலுக்கு திட்டமிட்டதாகவும் என்.ஐ.ஏ. தெரியவந்துள்ளதாக தெரிவித்தது.
மேலும் இதற்காக அவர் தற்கொலைப்படை தாக்குதல் நடத்துவேன் என உறுதிமொழியும் எடுத்துள்ளார் எனவும், இதற்கு கைது செய்யப்பட்ட 6 பேர் உடந்தையாக இருந்து சதி செயலில் ஈடுபட்டதாகவும், ஆன்லைனில் வெடிபொருட்கள் உள்பட பல்வேறு பொருட்களை வாங்கியதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து ஜமேஷா மூபினின் தீவிரவாத செயலுக்கு உதவியதாக முகமது தவ்பிக், உமர் பாரூக், பெரோஸ்கான், ஷேக் ஹியததுல்லா, சனோபர் அலி ஆகிய 6 பேரை என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைது செய்தனர்.
இந்நிலையில் உக்கடம் கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாகவும், தடைசெய்யப்பட்ட இயக்கங்களுடன் தொடர்பில் உள்ளதாக சந்தேகப்படும் 20க்கும் மேற்பட்டோரின் வீடுகளில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் இன்று அதிகாலை முதல் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
காலை 6 மணிக்கு வந்த தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் ஜி.எம்.நகர், உக்கடம், போத்தனூர், கரும்புக்கடை, கவுண்டம்பாளையம், கிணத்துக்கடவு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். கோவை மாநகராட்சி 82 வது வார்டு கவுன்சிலர் முபசீராவின் கணவர் ஆரிப்பிடம் என்ஐஏ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அதேபோல் உக்கடம் ஜி.எம். நகர் பகுதியை சேர்ந்த திமுக பிரமுகர் தமீமூன் அன்சாரி வீட்டில் சோதனைக்கு வந்துள்ளனர். அவர்களை வீட்டிற்குள் அனுமதிக்க மறுத்து வாக்குவாதம் செய்ததால் சிறுது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதே போல் கவுண்டம்பாளையம் பியூன்ஸ் காலனி பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றும் இப்ராஹிம் என்பவரது வீட்டில் என்.ஐ.ஏ சோதனை நடைபெற்று வருகிறது. இந்த 22 பேரும் ஜமேஷா முபின் கோவை உள்ள கல்லூரி ஒன்றில் பயின்ற போது, உடன்பயின்றவர்கள் என கூறப்படுகிறது.
சென்னையின் திருவிக நகர், நீலாங்கரை உள்ளிட்ட 3 இடங்களில் தேசிய புலனாய்வு அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு தொடர்பான வழக்கில் ஜார்கண்ட் உள்ளிட்ட இடங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் நேற்று (செப். 15) சோதனை நடத்தினர். அதன் தொடர்ச்சியாக இன்று சென்னை, கோவை உள்ளிட்ட இடங்களில் சோதனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
தீவிரவாத செயலுக்கு பயிற்சி அளிக்கப்படுவதாக வந்த தகவலை அடுத்து இந்த நடவடிக்கை எனவும், கோவை அரபிக் கல்லூரியில் தீவிரவாத செயலுக்கான பயிற்சி அளிக்கப்படுவதாக வந்த தகவலை அடுத்து, அந்த கல்லூரியில் படித்தவர்கள் மற்றும் அதில் தொடர்புடையவர்கள் வீடுகளில் என்.ஐ.ஏ சோதனை என தகவல் வெளியாகியுள்ளது.