காலி மதுபாட்டில் ரிட்டர்ன் பெறும் முறை: தமிழகம் முழுவதும் அமல்படுத்த உயர்நீதிமன்றம் உத்தரவு..!

டாஸ்மாக் மதுபாட்டில்களை திரும்ப பெறும் திட்டத்தை தமிழகம் முழுவதும் அமல்படுத்துமாறு தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Update: 2022-06-24 10:55 GMT

எப்போதும் குடிமகன்களால் நிரம்பி வழியும் தமிழக டாஸ்மாக் கடைகள் (கோப்பு படம்).

தமிழகத்தில் கொடைக்கானல், நீலகிரி உள்ளிட்ட மலைப்பகுதிகளுக்கு சுற்றுலா செல்லும் பயணிகள், குறிப்பாக குடிமகன்கள் காலி மதுபாட்டில்களை வனப்பகுதிகளில் வீசி செல்வது வழக்கமாக உள்ளது. இந்த பாட்டிகள் வீசி எறிவதால் கண்ணாடி துகள்களாக உடைந்து வன உயிரினங்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தின.

இதையடுத்து, நீலகிரி, திண்டுக்கல் மாவட்டங்களில் மலைப்பிரதேசங்களில் மட்டும், டாஸ்மாக் கடைகளில் விற்பனை செய்யும் மது பாட்டில்களில், 'ஈசி 10' என்னும் ஸ்டிக்கர் ஒட்டி 10 ரூபாய் கூடுதலாக விற்பனை செய்யும் நடைமுறை அமலானது. இந்த ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட காலி பாட்டில்களை டாஸ்மாக் கடைகளில் திரும்ப கொடுத்து 10 ரூபாயை திரும்ப பெற்றுக்கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டது.

இந்த திட்டம் தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது டாஸ்மாக் பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தை, நீலகிரியை தொடர்ந்து மாநிலம் முழுவதும் அமல்படுத்தும் வகையில் திட்டம் வகுக்க வேண்டும் எனவும், இந்த திட்டத்தை வடிவமைத்து, ஜூலை 15-ம் தேதிக்குள் சமர்ப்பிக்குமாறு டாஸ்மாக் நிர்வாகத்துக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், பாட்டில்களை திரும்ப ஒப்படைப்பது தொடர்பாக விழப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் விளம்பரங்கள் வெளியிட வேண்டும் எனவும், சுற்றுச்சூழல் பாதிப்பை தடுக்க வேண்டிய கடமை மாநில அரசுக்கு உள்ளது என்றும் நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News