சென்னை உள்பட 4 மாவட்டத்துக்கு ரெட் அலர்ட்: செம்பரம்பாக்கம் ஏரிதிறப்பு

சென்னை நகரில் கனமழை பெய்து வரும் நிலையில், 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

Update: 2021-12-30 15:45 GMT

சென்னையில் கடந்த 9 மணி நேரமாக கனமழை பெய்து வருகிறது. இதனால், நகரின் பல இடங்கள் மீண்டும் வெள்ளக்காடாக மாறியுள்ளது. குறிப்பாக திருவல்லிக்கேணி, அண்ணா சாலை, தி.நகர், தேனாம்பேட்டை, மெரினா கடற்கரை, பட்டினப்பாக்கம், மயிலாப்பூர், மந்தைவெளி, எம்.ஆர்.சி நகர், ஆதம்பாக்கம், கேளம்பாக்கம் ஆகிய பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது.

20, செ.மீ. மழை

இதனால் தாழ்வான இடங்களில் மழை நீர் சூழ்ந்துள்ளது. முக்கியச் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடுவதால், வாகனப் போக்குவரத்தும் முடங்கியுள்ளது. சென்னையில் உள்ள சுரங்கப்பாதைகள் மீண்டும் மழை நீர் தேங்கி, மூடப்பட்டுள்ளன.

கடந்த சில மணி நேரத்தில் மட்டும் சென்னையில் அதிகபட்சமாக, எம்.ஆர்.சி. நகரில் 20 செ.மீ. மழை பதிவாகி உள்ளது. நுங்கம்பாக்கத்தில் 17.2 செ.மீ. , நந்தனத்தில் 15 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.

ரெட் அலர்ட்!

இதனிடையே, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் அதிகனமழை பெய்வதற்கான, ரெட் அலர்ட்டை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. இரவில் பொதுமக்கள் கவனமுடன் இருக்குமாறு எச்சரிக்கப்பட்டுள்ளன். மழை நீர் தேங்கிய பகுதிகளில் வசிப்போரை மாற்று இடங்களில் தங்கவைக்க, மாநகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது.

ஏரி திறப்பு

செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ள நிலையில், ஏரியில் இருந்து ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆறு மணி நேரத்திற்கு மழை தொடரும் என்பதால், எனவே, கரையோர மக்கள் இரவில் விழிப்புடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

Tags:    

Similar News