தேவர் ஜெயந்தி விழாவில் பங்கேற்க தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி

Devar Jayanthi -தேவர் ஜெயந்தி விழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி வருகிற 30ம் தேதி தமிழகம் வருகிறார்.

Update: 2022-10-11 09:01 GMT

Devar Jayanthi -தேசம், தெய்வீகம் இரண்டும் எனது கண்கள் என்றவர் தெய்வத் திருமகன் என போற்றப்படும் பசும்பொன் முத்துராமலிங்க தேவர். ஜமீன் பரம்பரையில் தோன்றிய இவர் இந்தியாவில் சுதந்திர போராட்டம் தீயாக எரிந்து கொண்டிருந்த கால கட்டத்தில்  வெள்ளையர்களுக்கு எதிராக பெரும் போராட்டம் நடத்தினார். தனது சொத்துக்கள் பலவற்றையும் நாட்டுக்காகவும் மக்களுக்காகவும் விட்டுக் கொடுத்தார். நாட்டின் விடுதலைக்காக போராடியதற்காக ஆங்கிலேயே அரசு அவரை கைது செய்து சிறையில் அடைத்த போது சிறையில் இருந்தபடியே தேர்தலில் நின்று வெற்றி பெற்ற பெருமையும் பசும்பொன் முத்துராமலிங்க தேவருக்கு உண்டு.


சுபாஷ் சந்திர போஸ் ஐ. என். ஏ. எனப்படும் இந்திய தேசிய ராணுவத்தை பிரிட்டீஷ் அரசுக்கு எதிராக கட்டமைத்த போது தமிழகத்தில் இருந்து குறிப்பாக மதுரை, ராமநாதபுரம் மாவட்டங்களில் இருந்து ஏராளமான ஆண்களை அனுப்பி நாட்டின் விடுதலைக்காக போராடுவதற்காக பெருமை சேர்த்தவர் பசும்பொன் முத்துராமலிங்க தேவர். அதற்காக அவர் பார்வர்டு பிளாக் என்ற கட்சியையும் நிறுவினார்.

ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 30ஆம் தேதி தமிழகத்தில் தேவர் ஜெயந்தி விழா மிகவும் சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பசும்பொன் என்ற கிராமத்தில் அவரது நினைவிடம் உள்ளது.அவரது நினைவிடத்தில் தேவர் ஜெயந்தி மற்றும் குருபூஜை விழா மூன்று நாட்கள் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டும் வருகிற 28, 29, 30 ஆகிய மூன்று நாட்கள் நடைபெற உள்ளது. தேவர் ஜெயந்தி விழா ஆரம்ப கால கட்டங்களில் முக்குலத்தோர் சமுதாய மக்களால் கொண்டாடப்பட்டு வந்தது.

இந்த விழா பின்னர் அரசியல் விழாவாக மாறியது. ஆரம்ப கால கட்டங்களில் சமுதாய மக்கள் மட்டுமே முளைப்பாரி எடுத்தும் விரதங்கள் இருந்தும் வழிபாடு செய்து வந்தனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து மட்டும் இன்றி தமிழக முழுவதும் தேவர் சிலை வைக்கப்பட்டுள்ள இடங்களில் எல்லாம் அவரது சிலைகளுக்கு மாலை அணிவிப்பதும் முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக செல்வதுமாக தற்போது இந்த விழா கொண்டாடப்பட்டு வருகிறது .தேவர் ஜெயந்தி அன்று அவரது நினைவிடத்தில் கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோர் முதலமைச்சர் ஆக இருந்த காலகட்டத்தில் மரியாதை செலுத்தி இருக்கிறார்கள். ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது தேவர் சிலைக்கு தங்க கவசம் செய்து கொடுத்தார். தி.மு.க. , அ.தி.மு.க. கட்சிகள் மட்டுமின்றி அனைத்து அரசியல் கட்சிகளின்  தலைவர்களும் முன்னாள் இந்நாள் முதல்வர்களும்  தேவர் ஜெயந்தி விழாவில் பங்கேற்று மரியாதை செலுத்துவதும் கடந்த பல ஆண்டுகளாக வழக்கமாக இருந்து வருகிறது.


அந்த வகையில் இந்த ஆண்டும் தேவர் ஜெயந்தி விழா ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. தேவர் ஜெயந்தி விழாவில் பங்கேற்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு தமிழக பாரதிய ஜனதா கட்சி சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டது. இந்த அழைப்பை ஏற்று பிரதமர் மோடி வருகிற 30-ஆம் தேதி தமிழ்நாடு வருகிறார். தமிழகத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் அவர் தேவர் ஜெயந்தி விழாவிலும் கலந்து கொள்வார் என தெரிகிறது. இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யும்படி தமிழக காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு டெல்லியில் இருந்து உத்தரவு வந்துள்ளது. இதன் காரணமாக பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீசார் தீவிரமாக செய்து வருகிறார்கள்.

முதல்வர் எதிர்க்கட்சித் தலைவர் என தமிழக அளவில் இருந்து மட்டுமே தேவர் ஜெயந்தி விழாவில் தலைவர்கள் பங்கேற்று வந்துள்ள நிலையில் முதல் முறையாக நாட்டின் உயர்ந்த பதவியில் உள்ள பிரதமர் பங்கேற்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த சில மாதங்களாகவே தமிழகத்தை நோக்கி பிரதமர் மற்றும் மத்திய மந்திரிகள் அடிக்கடி வந்து சென்றபடி உள்ளனர். இதற்கு காரணம் 2024 ஆம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தல் தான் நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் பா.ஜ.க. கூட்டணி அமைத்தோ அல்லது தனியாக நின்றோ எப்படியாவது 10 தொகுதிகளில் வெற்றி பெற்றே தீர வேண்டும் என ஒரு கணக்கு வைத்திருக்கிறது.

அதற்கு சில தொகுதிகளையும் தேர்ந்தெடுத்து அதற்கான முன்னேற்பாடுகளை செய்து வருகிறது. அந்த பத்து நாடாளுமன்ற தொகுதிகளில் ராமநாதபுரம் மாவட்டம் உள்ளடக்கிய தொகுதியும் இடம்பெற்று இருப்பதால் பா.ஜ.க. நாடாளுமன்ற தேர்தல் கணக்கை இப்போதே தொடங்கிவிட்டது என அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள். தமிழகத்தில்  பசும்பொன் முத்துராமலிங்க தேவரை கடவுளாக நினைத்து வழிபடும் குறிப்பிட்ட சமுதாய மக்களின் ஆதரவை பெறுவதற்காக மோடி தேவர்  ஜெயந்தி விழாவில் பங்கேற்க வருகிறார் என கூறப்பட்டு வருகிறது. மேலும்  முத்துராமலிங்க தேவர் சிறந்த ஆன்மீக தலைவராகவும் மதிக்கப்பட்டு வருவதால் தற்போது தமிழகத்தில் இந்துக்களுக்கு எதிரான சனாதன பேச்சுக்களால்  தி.மு.க. மீது அதிருப்தியில் உள்ள மக்களின் ஆதரவை பெறுவதற்காகவும் மோடி தேவர் ஜெயந்தி விழாவை பயன்படுத்திக்கொள்கிறார் என்றும் பேசப்பட்டு வருகிறது.




அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News