கோவை, திருப்பூர் விசைத்தறி கூலி பிரச்னை: எட்டு சங்கங்கள் உடன்பாடு

எட்டு சங்க நிர்வாகிகளின் ஒப்புதலுடன் விசைத்தறி கூலி உயர்வு பிரச்னைக்கு அமைச்சர் முன்னிலையில் தீர்வு ஏற்பட்டது.

Update: 2022-02-16 13:30 GMT

கோப்பு படம் 

கோவை, திருப்பூர் மாவட்டத்தில், 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விசைத்தறிகள் உள்ளன. பல்லடம், சோமனூர், மங்கலம், புதுப்பாளையம், கண்ணம்பாளையம், வேலம்பாளையம், அவினாசி, தெக்கலூர், மற்றும் பெருமாநல்லூர் என, இரண்டு மாவட்டத்தில், 9 விசைத்தறி சங்கங்கள் உள்ளன.

கடந்த, 2014 முதல் கூலி உயர்வு வழங்கப்படாததை கண்டித்து, ஜன., 9 முதல் இரண்டு மாவட்ட விசைத்தறி உரிமையாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பல கட்ட பேச்சுவார்த்தைக்கு பின், சோமனூர் ரகத்துக்கு, 19, பல்லடம் ரகத்துக்கு, 15 சதவீத கூலி நிர்ணயிக்கப்பட்டது. இதை உறுதிப்படுத்துவதற்கான பேச்சுவார்த்தை கூட்டம், நேற்று திருப்பூர் அருகே மங்கலம் பகுதி தனியார் மண்டபத்தில் நடந்தது.

இதில், அமைச்சர்கள் சாமிநாதன், கயல்விழி தலைமையில் நடந்த பேச்சுவார்த்தையை தொடர்ந்து, 19 மற்றும் 15 சதவீத கூலி உயர்வு வழங்குவதாக ஜவுளி உற்பத்தியாளர்கள் உறுதி அளித்தனர். இதன்படி, கூலி உயர்வு ஒப்பந்தத்தை ஏற்று, பல்லடம், வேலம்பாளையம், கண்ணம்பாளையம், மங்கலம் பகுதிகளுக்கு உட்பட்ட விசைத்தறிகள் நாளை (17ம் தேதி) முதல் இயங்கும் என தெரிவிக்கப்பட்டது.

Tags:    

Similar News