அதிமுக தலைமை அலுவலகத்தில் ஓபிஎஸ், இபிஎஸ் ஆதரவாளர்கள் கல்வீச்சு.. பதற்றம்

அதிமுக தலைமை அலுவலகத்தில் ஓபிஎஸ், இபிஎஸ் ஆதரவாளர்கள் கல்வீச்சு, பதற்றம் ஏற்பட்டுள்ளதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Update: 2022-07-11 03:22 GMT

அதிமுக தலைமை அலுவலகத்தில் ஓபிஎஸ், ஈபிஎஸ் ஆதரவாளர்கள் இடையே மோதல்.

சென்னை வானகரத்தில் இன்று காலை 9.15 மணி அளவில் ஸ்ரீவாரி திருமண மண்டபத்தில் அதிமுக பொதுக்குழு கூட்டம் தொடங்குகிறது. இதில் பங்கேற்பதற்காக எடப்பாடி பழனிசாமி வானகரத்திற்கு புறப்பட்டுள்ளார். இதனிடையே சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தை நோக்கி ஓ.பன்ன்னீர் செல்வம் புறப்பட்டுள்ளார்.

அதிமுக தலைமை அலுவலகம் பூட்டப்பட்டுள்ள நிலையில், எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் ஆதரவாளர்கள் இடையே தள்ளுமுள்ளு, கடும் மோதல் ஏற்பட்டுள்ளது. இதனால் கற்கள், கட்டைகளை கொண்டு இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கிக்கொண்டனர். இதில், சிலருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.

கட்சியின் தலைமை அலுவலக பூட்டை உடைத்து ஓபிஎஸ் ஆதரவாளர்கள் உள்ளே புகுந்தனர். அங்கு ஒட்டப்பட்டிருந்த ஈபிஎஸ் பேனர்களை ஓபிஎஸ் ஆதரவாளர்கள் கிழித்தனர். அங்கு நிலை மோசமடைந்துள்ளதால் கட்டுப்படுத்த ஏராளமான போலீசார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.

பொதுக்குழுவுக்கு தடை கோரிய வழக்கு இன்னும் சற்று நேரத்தில் தீர்ப்பு வழங்க உள்ள நிலையில், இச்சம்பவம் நடைபெற்றது அதிமுக தலைமை அலுவலக வளாகத்தில் பதற்றம் நிலவி வருகிறது.

Tags:    

Similar News