ஓ.பி.எஸ். மீதான சொத்து குவிப்பு வழக்கு மார்ச் 25ம் தேதிக்கு ஒத்தி வைப்பு

ஓ.பி.எஸ். மீதான சொத்து குவிப்பு வழக்கு மார்ச் 25ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது.

Update: 2024-03-05 12:10 GMT

முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம்.

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு எதிராக தாமாக முன் வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கின் விசாரணையை, சென்னை உயர் நீதிமன்றம், மார்ச் 25ம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளது.

கடந்த 2001-2006ம் ஆண்டுகளில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அமைச்சரவையில் வருவாய் துறை அமைச்சராக பதவி வகித்த ஒ.பன்னீர்செல்வம், வருமானத்துக்கு அதிகமாக ஒரு கோடியே 77 லட்சம் ரூபாய் அளவுக்கு சொத்துக்கள் குவித்ததாக, 2006-ல் திமுக ஆட்சி காலத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்தது.

பன்னீர்செல்வம் மற்றும் அவரது மனைவி விஜயலட்சுமி, மகன் ரவீந்திரநாத், தம்பி ஓ.ராஜா, அவரது மனைவி சசிகலாவதி, மற்றொரு தம்பி ஓ.பாலமுருகன், அவரது மனைவி லதா மகேஸ்வரி ஆகியோர் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

சிவகங்கை நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்த இந்த வழக்கில், குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரங்கள் இல்லை எனக் கூறி, வழக்கைத் திரும்பப் பெற அனுமதி கோரி லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அந்த அறிக்கையை ஏற்ற சிவகங்கை நீதிமன்றம், பன்னீர்செல்வம் உள்ளிட்டோரை விடுவித்து 2012ல் சிவகங்கை நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது

இந்த உத்தரவை மறு ஆய்வு செய்வது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளார். இந்த வழக்கில் இன்று முதல் இறுதி விசாரணைக்கு தேதி நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. அதன்படி, வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்த போது, ஓபிஎஸ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் இந்த வழக்குகளில் மூத்த வழக்கறிஞர் இன்றும் நாளையும் ஆஜராகி வாதாட இயலாததால், விசாரணையை தள்ளிவைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, வழக்கின் விசாரணையை மார்ச் 25 மற்றும் 26ம் தேதிகளுக்கு தள்ளிவைத்தார்.

Tags:    

Similar News