பள்ளிகள் திறக்கப்படும் தேதி நாளை அறிவிக்கப்படும்: அமைச்சர் அன்பில் மகேஷ்

பள்ளிகள் திறக்கப்படும் தேதி குறித்து நாளை அறிவிக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார்.

Update: 2023-05-25 17:30 GMT

பைல் படம்.

தமிழகத்தில் 1 முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான ஆண்டு இறுதித் தேர்வுகள் பள்ளி அளவில் அந்தந்த மாவட்ட வாரியாக ஏப்ரல் 11-ம் தேதி தொடங்கி நடைபெற்றது. தேர்வுகள் முடிந்த பிறகு ஏப்ரல் 29 ஆம் தேதி முதல் கோடை விடுமுறை விடப்பட்டது.

அதேபோல், 10 மற்றும் பிளஸ் 2 உள்ளிட்ட பொதுத்தேர்வு எழுதும் மாணவ மாணவிகளுக்கும் தேர்வுகள் முடிந்த பிறகு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. கடந்த வாரம் 10,11,12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன.

தற்போது பள்ளி மாணவர்கள் கோடை விடுமுறையில் இருந்து வரும் நிலையில், ஜூன் 1-ந் தேதி, 6 முதல் பிளஸ் 2 வரையுள்ள மாணவர்களுக்கு பள்ளிகள் தொடங்கப்படும் என்றும், 1 முதல் 5-ம் வகுப்பு வரையான மாணவர்களுக்கு ஜூன் 5-ந் தேதி பள்ளிகள் தொடங்கும் என்றும் ஏற்கனவே அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது.

தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. தமிழகம் முழுவதும் வாட்டி வதைக்கும் வெயில் காரணமாக பள்ளி திறப்பு தேதி தள்ளி வைக்கப்படுமா? என்று மாணவர்களும், பெற்றோர்களும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். எனினும், கடந்த இரு தினங்களுக்கு முன்பாக கூட செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், ஏற்கனவே அறிவித்த தேதிகளில் பள்ளிகள் தொடங்கப்படும் என்று கூறினார்.

எனினும், வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பள்ளிகள் திறக்கும் தேதி தள்ளி வைப்பது குறித்து பரிசீலனை செய்ய வேண்டும் என்பதே பெற்றோர்கள் எதிர்பார்ப்பாக உள்ளது. இந்த நிலையில், இன்று திருச்சியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படும் தேதி நாளை அறிவிக்கப்படும் என்றார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், "பள்ளிகள் திறக்கப்படும் தேதி குறித்து முதல்-அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று நாளை அறிவிக்கப்படும்" என்றார். வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், பள்ளிகள் திறப்பு குறித்து மாவட்ட கல்வி அலுவலருடன் அமைச்சர் அன்பில் மகேஷ் காணொளி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார்.

Tags:    

Similar News