போலி மதிப்பெண் சான்றிதழ் அளித்து பணியில் சேர்ந்த வட மாநிலத்தவர் சிக்கினர்

தமிழகத் தேர்வுத் துறை அளித்ததுபோல, போலி மதிப்பெண் சான்றிதழை வழங்கி பணியில் சேர்ந்த வட மாநிலத்தவர்கள் சிக்கியுள்ளனர்.

Update: 2022-04-13 06:33 GMT

மாதிரி படம் 

இந்திய அஞ்சல் துறை, சிஆர்பிஎஃப், இந்தியன் ஆயில் நிறுவனம் உள்ளிட்ட பல்வேறு மத்திய அரசு நிறுவனங்களில் பணியில் சேர, வட மாநிலங்களைச் சேர்ந்த 200-க்கும் அதிகமானோர் போலி மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கியது உறுதி செய்யப்பட்டது.

மதிப்பெண் சான்றிதழ் சரிபார்ப்புக்காக மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் தமிழகத் தேர்வுத் துறைக்கு அனுப்பியபோது இந்த மோசடி அம்பலம் ஆகியுள்ளது.

இதையடுத்து, போலி சான்றிதழ் தந்த நபர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க தேர்வுத் துறை பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. 200க்கும் அதிகமானோர் இந்த மோசடிச் செயலில் ஈடுபட்டுள்ளனர்.

ஏற்கெனவே தமிழகத்தில் படித்த லட்சக்கணக்கான இளைஞர்கள் அரசுப் பணிக்காகக் காத்திருக்கும் சூழலில் இந்திய அஞ்சல் துறை, சிஆர்பிஎஃப், இந்தியன் ஆயில் நிறுவனம் உள்ளிட்ட முக்கிய மத்திய அரசு நிறுவனங்களில் சேர, சான்றிதழ் மோசடி செய்யப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

முன்னதாக ஏராளமான வட மாநிலத்தவர் தமிழகத்தில் உள்ள ரயில்வே உள்ளிட்ட பல்வேறு மத்திய அரசுப் பணிகளில் சேர்ந்துள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதை எதிர்த்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, பாமக நிறுவனர் ராமதாஸ், தமிழக வாழ்வுரிமைக் கட்சிகளின் தலைவர் தி.வேல்முருகன், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்டோர் போராட்டங்களை நடத்தினர்.

இந்த மோசடிக்கும் அரசு அதிகாரிகளுக்கும் சம்பந்தம் உள்ளதா என்று கேள்வி எழுந்துள்ளது. 

Tags:    

Similar News