ஊரடங்கு கட்டுப்பாடுகளில் தற்போது புதிய தளர்வு- கட்டுமான நிறுவனங்கள் செயல்பட அனுமதி

Update: 2021-06-13 08:43 GMT

கட்டுமான நிறுவனங்கள் செயல்பட அனுமதி

தமிழகத்தில் விதிக்கப்பட்டுள்ள ஊரடங்கு கட்டுப்பாடுகளில் தற்போது புதிய தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி கட்டுமான நிறுவனங்கள் நாளை (ஜூன் 14) முதல் செயல்பட தமிழக முதல்வர் ஸ்டாலின் அனுமதியளித்து உத்தரவு பிறப்பித்து உள்ளார்.

தமிழகத்தில் கொரோனா நோய் பரவல் குறைந்து வருவதால் முதல்வர் ஸ்டாலின் பல தளர்வுகளை அறிவித்து வருகிறார். ஏற்கனவே கடந்த ஜூன் 11ம் தேதி முதல்வர் ஸ்டாலின் புதிய தளர்வுகளை அறிவித்து ஊரடங்கு கட்டுப்பாடுகளை ஜூன் 21ம் தேதி வரை நீட்டித்து உத்தரவு பிறப்பித்தார். இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் குறைவாக காணப்படும் 27 மாவட்டங்களுக்கு மேலும் பல புதிய தளர்வுகளை முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

தற்போது இது குறித்து தமிழக அரசு சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்ததாவது, தமிழகத்தில் கட்டுமான பணிகள் மேற்கொள்ள ஏற்கனவே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் அப்பணிகளுக்கான அலுவலகங்கள் இயங்காத நிலையில் பணியாளர்களுக்கு சம்பளம் வழங்கவும், வாங்கும் கட்டுமான பொருட்களுக்கு பணம் செலுத்தவும் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வந்தது. இதனால் பணியாளர்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர்.

தற்போது இதனை கருத்தில் கொண்டு கட்டுமான நிறுவனங்களின் அலுவலகங்கள் நாளை (ஜூன் 14) முதல் 50 சதவிகித ஊழியர்களுடன் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அலுவலகங்களில் பணியாளர்கள் முறையாக கொரோனா பாதுகாப்பு வழிகாட்டுதல்களை கடைபிடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தற்போது இந்த அறிக்கை கட்டுமான பணியாளர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது.

Similar News