பாவலரேறு பெருஞ்சித்திரனார் காலமான தினமின்று😢

Update: 2021-06-11 03:43 GMT

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

பாவலரேறு பெருஞ்சித்திரனார் காலமான தினமின்று😢


பாவலரேறு பெருஞ்சித்திரனார் 

"என்மொழி, என்னினம், என்நாடு நலிகையில்

எதனையும் பெரிதென எண்ண மாட்டேன் - வேறு

எவரையும் புகழ்ந்துரை சொல்ல மாட்டேன்! - வரும்

புன்மொழி, பழியுரை, துன்பங்கள் யாவையும்

பொருட்டென மதித்துளம் கொள்ள மாட்டேன்! - இந்த(ப்)

பூட்கையில் ஓரடி தள்ள மாட்டேன்!''

என்று எழுதி அதன்வழி வாழ்ந்துகாட்டியவர் பாவலரேறு பெருஞ்சித்திரனார் ஆவார்.

தமிழில் பிறமொழிச் சொற்களை வகை தொகையின்றிக் கலந்து எழுதும் போக்கை இருபதாம் நூற்றாண்டில் தடுத்து நிறுத்தியவர் தனித்தமிழ்த் தந்தை மறைமலை அடிகளார் என்றால், தமிழைத் தூய தமிழாக வழக்கில்  கொண்டுவர முனைந்து நின்றவர்கள் மொழி ஞாயிறு பாவாணரும், அவர் தம் தலைமாணாக்கர் பாவலரேறு பெருஞ்சித்திரனாரும் ஆவார்

இரண்டாயிரம் ஆண்டுகளாக நிகழ்ந்த பாதிப்புகளைவிட இருபதாம் நூற்றாண்டில்தான் தமிழுக்கும், தமிழர்களுக்கும் அதிகப் பாதிப்புகள் ஏற்பட்டன. சமற்கிருதச் செல்வாக்கு, இந்தி எதிர்ப்பு, வடபுல ஆதிக்கம், ஆங்கிலவழிக்கல்வி, ஈழத்தமிழர் போராட்டம் என்று பலமுனைகளில் தமிழும், தமிழர்களும் தாக்கப்பட்டனர். இவற்றைத் துணிவுடன் எதிர்கொண்டவர்களுள் பாவலரேறு பெருஞ்சித்திரனார் குறிப்பிடத்தக்கவர்.

அஞ்சல்துறையில் அரசுப்பணியாற்றிய துரை.மாணிக்கம் தம் இயக்கப் பணிகளுக்குச் சார்பாகப் பெருஞ்சித்திரனார் என்னும் புனைபெயரில் எழுதத்தொடங்கினார். இத்தகு மானப்பெயரில் சங்க காலத்தில் ஒரு பெரும்புலவர் வாழ்ந்துள்ளதை நாம் கவனத்தில்கொள்ள வேண்டும். மான உணர்வு நிறைந்த பழம்புலவரின் இப்பெயரைத் தேர்ந்தெடுக்கும் அளவுக்கு இவருக்குச் சின்னஞ்சிறு அகவையில் தமிழ்ப்பற்று உருவாவதற்குக் காரணம் தமிழ்உணர்வு கொண்டவர்கள் ஆசிரியர்களாக வாய்த்தமையே ஆகும். தமிழ் மறவர் பொன்னம்பலனார், சேலம் நடேசனார் என்னும் புலவர்களிடம் உயர்நிலைப்பள்ளியில் தமிழ் கற்ற பெருஞ்சித்திரனாருக்குச் சேலம் நகராட்சிக் கல்லூரியில் மொழிஞாயிறு பாவாணர் ஆசிரியராக வாய்த்தமை தமிழ் செய்த தவமாகும்.

Similar News