கடும் பொருளாதார சிக்கலில் உள்ள இலங்கைக்கு உதவ வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் கடிதம்

கடும் பொருளாதார சிக்கலில் உள்ள இலங்கைக்கு அத்தியாவசியப் பொருட்களை அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமருக்கு முதல்வர் கடிதம் எழுதியுள்ளார்.

Update: 2022-04-29 17:07 GMT

இலங்கைக்கு அத்தியாவசியப் பொருட்களை தமிழ்நாட்டிலிருந்து அனுப்பி வைக்க உரிய அனுமதிகளை வழங்கிட ஒன்றிய வெளியுறவுத் துறைக்கு உத்தரவிடகோரி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடிக்குக் கடிதம் எழுதியுள்ளார்.

கடும் பொருளாதார சிக்கலில் உள்ள இலங்கை மக்களுக்கு உணவு, அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் உயிர்காக்கும் மருந்துகளை தமிழ்நாட்டிலிருந்து அனுப்பி வைக்க உரிய அனுமதிகளை வழங்கிட மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்திற்கு உத்தரவிடுமாறு கோரி, தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடிக்குக் கடிதம் எழுதியுள்ளார்.

கடிதத்தில் முதல்வர் குறிப்பிட்டதாவது:

இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடியின் காரணமாக, இலட்சக்கணக்கான மக்கள் துன்பத்திற்கும், துயரத்திற்கும் ஆளாகியுள்ளனர் என்றும், ஒவ்வொரு நாளும் அங்கு நிலைமை மோசமடைந்து வருவதாகவும் குறிப்பிட்டு, அங்குள்ள மக்களுக்கு உருவாகி வரும் தீவிர நெருக்கடிக்கு உடனடியாகத் தீர்வு காணப்பட வேண்டும்.

இது தொடர்பாக, 31-3-2022 அன்று தான் ஏற்கெனவே அளித்த கோரிக்கை மனுவின்மூலம், இப்பிரச்சினையை இந்தியப் பிரதமர் அவர்களின் கவனத்திற்குக் கொண்டு சென்றதாகவும், இலங்கையில் வாடும் மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் உயிர் காக்கும் மருந்துகளை வழங்குவதற்குத் தமிழ்நாடு அரசு தயாராக உள்ளது .

மேலும், 15-4-2022 அன்று வெளியுறவுத் துறை அமைச்சருக்கு தான் எழுதிய கடிதத்திலும், அவருடன் நடைபெற்ற தொலைபேசி உரையாடலின்போதும் இந்தக் கோரிக்கையை மீண்டும் வலியுறுத்தியிருந்ததோடு, இலங்கை மக்களுக்கு தமிழ்நாடு அரசு தேவையான பொருட்களையும், உதவிகளையும் வழங்குவதற்கு ஒன்றிய அரசின் அனுமதியைக் கோரியிருந்ததாகவும், ஆனால், இந்தக் கோரிக்கை குறித்து இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவலும் ஒன்றிய அரசிடமிருந்து தமிழ்நாடு அரசுக்குக் கிடைக்கப்பெறவில்லை.

இதற்கிடையில், இலங்கையில் நிலவும் அமைதியின்மை மற்றும் மக்கள் அனுபவித்து வரும் சொல்லொணாத் துயரங்கள் குறித்த செய்திகள் நாள்தோறும் வந்து கொண்டிருப்பதாகவும், இந்த இக்கட்டான சூழ்நிலையில், தமிழ்நாடு அரசின் கோரிக்கையை ஏற்று, அத்தியாவசிப் பொருட்களையும், உயிர் காக்கும் மருந்துகளையும் உடனடியாக இலங்கைக்கு அனுப்பிட தேவையான ஏற்பாடுகளைச் செய்து, உரிய அனுமதிகளை ஒன்றிய அரசு வழங்கிட வேண்டுமென்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை இன்று (29-4-2022) ஒருமனதாக தீர்மானத்தை நிறைவேற்றப்பட்டது.

இத்தீர்மானத்தை சட்டமன்றப் பேரவையில் நிறைவேற்றுவதற்கு முன்னர் நடைபெற்ற விவாதத்தின்போது, அவையில் இடம்பெற்றுள்ள அனைத்துச் சட்டமன்றக் கட்சிகளும், இலங்கையில் நிலவும் நிலைமையைக் கருத்தில் கொண்டு, இவ்விஷயத்தில் மேலும் தாமதிக்காமல் உரிய நேரத்தில் உதவிக்கரம் நீட்ட வேண்டியதன் அவசியம் குறித்து தங்களது ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தின.

இன்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட இந்தத் தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளவாறு, தமிழக மக்களின் ஒருமித்த உணர்வுகளை தான் பகிர்ந்து கொள்ள விரும்புவதாகக் குறிப்பிட்டுள்ள முதலமைச்சர், தமிழ்நாட்டிலிருந்து இலங்கை மக்களுக்கு உணவு, அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் உயிர்காக்கும் மருந்துகளை விரைவாக எடுத்துச் செல்வதற்கு உரிய அனுமதிகளை வழங்குவதற்குத் தேவையான அறிவுறுத்தல்களை ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சகத்திற்கு உடனடியாக வழங்கிடுமாறு கோரியுள்ளதோடு, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் இன்று நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் நகலையும் இந்தியப் பிரதமர் அவர்களின் மேலான கவனத்திற்கு இக்கடிதத்துடன் இணைத்து அனுப்பியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News