நாமக்கல்லில் நாளை தனியார் துறை வேலைவாய்ப்பு சிறப்பு முகாம்

நாமக்கல்லில் நாளை (1ம் தேதி) தனியார் துறை வேலைவாய்ப்பு சிறப்பு முகாம் நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Update: 2022-03-31 15:29 GMT

பைல் படம்.

நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தனியார்துறை நிறுவனங்களும் - தனியார் துறையில் பணிபுரிய விருப்பம் உள்ள மனுதாரர்களும் நேரடியாக சந்திக்கும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமைதோறும் நடைபெற்று வருகிறது.

ஒவ்வொரு மாதமும் மூன்றாவது வெள்ளிக்கிழமை மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் நடைபெறும். மேலும் இவ்வாரத்திற்கான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை (01.04.2022) நடைபெறவுள்ளது. எனவே, தனியார் துறை நிறுவனங்கள் தங்களுக்குத் தேவையான நபர்களை அவர்களது நிர்வாகிகளைக் கொண்டு நேரில் தேர்வு செய்து கொள்ளலாம்.

இம்முகாமில் பல்வேறு தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு மேலாளர், கணினி இயக்குபவர், மார்க்கெட்டிங் எக்ஸிக்யூட்டிவ், ஏரியா மேனேஜர், டீம் லீடர், சூப்பர்வைசர், கணக்காளர், காசாளர் தட்டச்சர், மெக்கானிக், சேல்ஸ் அசிஸ்ட்டென்டு போன்ற பணிகளுக்கு தேர்வு செய்யவுள்ளனர்.

10-ம் வகுப்பு தேர்ச்சி / தேர்ச்சிபெறாதவர், 12-ம் வகுப்பு, பட்டயப்படிப்பு (Diploma) பட்டப்படிப்பு (டிகிரி) ஐ.டி.ஐ (தொழிற்பழகுநர்) பயிற்சி மற்றும் கணினியில் (Java / Tally) முடித்த ஆண், பெண் மற்றும் அனைத்துவித கல்வித்தகுதி உள்ளோரும் இம்முகாமில் கலந்துகொண்டு பயன்பெறலாம். மேலும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் வழங்கும் இலவச திறன் பயிற்சிகளில் சேர பதிவும் ஆலோசனையும் வழங்கப்படும்.

இம்முகாமில் பங்கு பெறும் வேலையளிப்போரும், வேலைநாடுநரும் எவ்வித கட்டணமும் செலுத்த தேவையில்லை. இம்முகாமானது முற்றிலும் இலவசமானது. மேலும், இவ்வேலைவாய்ப்பு முகாமின் மூலம் பணிவாய்ப்பு பெற்றவரது வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்து செய்யப்படமாட்டாது. கொரோனா விதிமுறைகளுக்கு உட்பட்டு, அலுவலகத்திற்கு வரும் அனைவரும் தவறாது மாஸ்க் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்றவும்.

ஆகவே, மேற்படி பணிகளுக்கு தகுதியும், விருப்பமும் உள்ள மாற்றுத்திறனாளிகள் மற்றும் அனைவரும் வருகின்ற 01.04.2022 அன்று (வெள்ளிக்கிழமை) காலை 10.30 மணிக்கு நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெறவுள்ள தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா.பி.சிங் கேட்டுக் கொண்டுள்ளார்.

Tags:    

Similar News