செங்கல்பட்டில் மொபைல் உதிரிபாகங்கள் தொழிற்சாலை நாளை தொடங்கி வைப்பு

பெகட்ரானின் புதிய மின்னணு சாதனங்கள் உற்பத்தி தொழிற்சாலையை மத்திய இணையமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் தமிழ்நாட்டில் நாளை தொடங்கி வைக்கிறார்.

Update: 2022-09-29 14:54 GMT

பைல் படம்.

செங்கல்பட்டு: பெகட்ரானின் புதிய மின்னணு சாதனங்கள் உற்பத்தி தொழிற்சாலையை மத்திய இணையமைச்சர்  ராஜீவ் சந்திரசேகர் தமிழ்நாட்டில் நாளை தொடங்கி வைக்கிறார்.

ஆப்பிள் நிறுவனம் தயாரித்து வரும் ஐபோன்களை அசம்பிளிங் செய்யும் பணிகளை ஃபாக்ஸ்கான், விஸ்ட்ரோன், பெகட்ரான் ஆகிய நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. இந்த நிறுவனங்களில் விஸ்ட்ரா மற்றும் ஃபாக்ஸ்கான் நிறுவனங்கள் ஏற்கனவே சென்னையில் தங்களது கிளை ஆலைகளைத் தொடங்கியுள்ளன.

சென்னை தற்போது உலக அளவில் டெலிகாம் மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்களால் குறி வைக்கப்பட்டுள்ளது. முக்கியமாக அமெரிக்காவின் தொழில்நுட்ப நிறுவனங்கள் பல சென்னைக்கு வர முடிவு செய்துள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா பெருந்தொற்று சீன நாட்டிலிருந்து பரவியதாக கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து, ஏராளமான நாடுகள் சீனாவை புறக்கணிக்கத் தொடங்கின. இதனைத்தொடர்ந்து உற்பத்திக்காகச் சீனாவைச் சார்ந்து இல்லாமல் அங்கு இருந்து பல்வேறு நிறுவனங்கள் வெளியேறி வந்தன. அதேபோல் சீனாவில் இருந்து வெளியேறும் மற்ற அமெரிக்க நிறுவனங்கள் சென்னையில் தனது கிளையை தொடங்க ஆலோசனை செய்து வந்தன.

எனவே ஐபோன்களை அசம்பிளிங் செய்யும் இரண்டாம் பெரிய நிறுவனமான பெகட்ரான் இந்தியாவில், அதுவும் நம்ம சென்னையில் கிளையைத் தொடங்கியது. விரைவில் பெகட்ரான் நிறுவனம் சென்னையில் தங்களது ஐபோன் உற்பத்தியைத் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் தற்போது ஆப்பிள் நிறுவனத்திற்கு உதிரி பாகங்களை அனுப்பும் பெகட்ரான் நிறுவனம் தற்போது சென்னையில் தனது கிளையை திறந்துள்ளது. ஆப்பிள் நிறுவனத்திற்கு உதிரி பாகங்களை அனுப்பும் இரண்டாவது பெரிய நிறுவனம்தான் பெகட்ரான் நிறுவனம். சீனாவில் இருந்து வெளியேறி சென்னையில் இவர்கள் தங்கள் கிளையை தொடங்கியுள்ளது.

மாநில அரசுகளுடன் பேசி, நிலம் தொடர்பாக ஆலோசனைகளை செய்து கடைசியாக சென்னைக்கு இந்த தொழிற்சாலை அமைக்கப்பட்டது. இதன் மூலம் சென்னையில் அமைய போகும் இரண்டாவது பெரிய ஆப்பிள் தொழிற்சாலை இது. சென்னையில் ஏற்கனவே ஆப்பிள் நிறுவனத்திற்கு உதிரி பாகங்களை அனுப்பும் ஃபாக்சான் நிறுவனம் உள்ளது.

தைவானை சேர்ந்த இந்த நிறுவனம் சீனாவில் இருந்து மொத்தமாக வெளியேறி சென்னையில் பல்வேறு முதலீடுகளை செய்துள்ளது. இந்த நிலையில் தற்போது தைவானின் இன்னொரு நிறுவனமான பெகட்ரான் சென்னைக்கு வந்துள்ளது. இந்த நிறுவனத்தின் மதிப்பு 45 பில்லியன் டாலர் என்று கூறுகிறார்கள். உலகில் மூன்றாவது பெரிய மொபைல் உதிரி பாக தயாரிப்பு நிறுவனம் ஆகும். இந்த நிறுவனம் மொபைல் மட்டுமின்றி லேப்டாப், டேப்லெட்,தொலைக்காட்சி ஆகியவற்றை கூட தயாரிக்கிறது. ஆப்பிள் நிறுவனம் கொடுத்த அழுத்தத்தின் மற்றும் ஆலோசனையின் பெயரில்தான் இந்த இரண்டு நிறுவனங்களும் சென்னை வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த நிறுவனம் வடிவமைப்பு மற்றும் உற்பத்திக்கானதாகும். தகவல் தொடர்பு சாதனங்கள், கணக்கிடும் சாதனங்கள், நுகர்வோருக்கான மின்னணு பொருட்கள் ஆகியவற்றின் தொழில் நுட்பங்களில் முன்னணியில் உள்ளது. மின்னணு சாதனங்கள் உற்பத்தி நிறுவனங்களில் பெகட்ரான் நிறுவனம் உலக அளவிலான தரவரிசையில் இரண்டாவது இடத்தில் உள்ளது. 2021-ல் பார்ச்சூன் குளோபல் 500 தரவரிசையில், 235-ஆக இந்நிறுவனம் இருந்தது. இந்த நிறுவனம், தென்கிழக்கு ஆசியா, இந்தியா, ஐரோப்பா, அமெரிக்கா ஆகியவற்றில் உற்பத்தி நிறுவனங்களை கொண்டுள்ளது. 2022 ஜூலை மாதத்தில் இதன் துணை நிறுவனமான பெகட்ரான் இந்தியா தொடங்கப்பட்டது. 

மத்திய அரசின் பிரபலமான உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத்தொகைத் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள தைவானின் மின்னணு சாதன ஜாம்பவானான பெகட்ரானின் புதிய செல்பேசி தயாரிப்பு தொழிற்சாலை சென்னையை அடுத்த செங்கல்பட்டு தொழிற் பூங்காவில் நாளை (செப்டம்பர் 30) தொடங்கப்பட உள்ளது.

இந்த நிகழ்வில், மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் திரு ராஜீவ் சந்திரசேகர் கவுரவ விருந்தினராக கலந்துகொள்வார்.

2014-15-ல் செல்பேசி உற்பத்தியின் மதிப்பு ரூ. 18,900 கோடி அளவுக்கு குறைந்திருந்த நிலையில், உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத்தொகைத் திட்டத்தின் முதல் ஆண்டுக்குள் 28 சதவீதம் அதிகரித்து, ரூ.60000 கோடி என பதிவாகியது. தற்போது மேலும் 14 மடங்கு உயர்ந்து, ரூ.2,75,000 கோடி என்ற அளவுக்கு அதிகரித்துள்ளது.

2015-16ல் செல்பேசி ஏற்றுமதி ஏறத்தாழ பூஜ்யம் என்ற நிலையில் இருந்தது. உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத்தொகைத் திட்டம் போன்றவற்றால் 2019-20ல் ஏற்றுமதி மதிப்பு ரூ.27,000 கோடியை தொட்டது. உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத்தொகைத் திட்டத்தின் முதலாண்டிற்குள் 66 சதவீதம் அதிகரித்து, ரூ. 45,000 கோடியை எட்டியது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், ஏப்ரல்-ஆகஸ்ட் வரையிலான முதல் 5 மாதங்களில் செல்பேசி ஏற்றுமதி 140 சதவீதம் உயர்ந்து, ரூ.25,000 கோடியாக அதிகரித்தது. கடந்த ஆண்டு இதே காலத்தில், இந்த மதிப்பு ரூ.10,300 கோடியாக இருந்தது.

Tags:    

Similar News