பொங்கல் சிறப்பு பேருந்துகள் குறித்து அமைச்சர் ராஜகண்ணப்பன் விளக்கம்

பொங்கல் பண்டிகைக்கு இயக்கப்படும் சிறப்பு பேருந்துகள் குறித்து போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் விளக்கம் அளித்துள்ளார்

Update: 2022-01-05 04:32 GMT

போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன்.

சென்னை செல்வதற்காக மதுரை விமான நிலையம் வந்த போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் செய்தியாளரை சந்தித்து பேசினார்.

அப்போது பேசிய அவர், கொரோனா பாதிப்புக்கு தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் புதிதாக வந்துள்ள ஒமிக்ரான் பரவல் அதிகமாக இருந்தாலும் பாதிப்பு குறைவாக இருக்கும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்து தமிழக அரசு தக்க நடவடிக்கை எடுக்கும். 

பொங்கல் பண்டிகைக்கு தனித்தனியாக பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. தீபாவளி பண்டிகைக்கு பேருந்துகள் எப்படி இயக்கப்பட்டதோ, அதுபோன்று கூட்ட நெரிசலை தவிர்த்து பேருந்துகள் இயக்கப்படும் .இதனால் கொரோனா பரவல் ஏற்படாது.  பேருந்துகளில் சமூக இடைவெளியை கடைபிடித்தல், முக கவசம் அணிதல், சானிடைசர் பயன்படுத்த  அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி உள்ளோம் என தெரிவித்தார்.

நீதிமன்றத்தில் மாற்றுத்திறனாளிகள் தொடர்ந்த வழக்கு முடிந்தவுடன் புதிய பேருந்துகள் வாங்கப்படும். சென்னையின் 2500 இடங்களில் பேருந்து பணிமனையில் கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது. இதனை தொடர்ந்து மதுரை, கோவை, திருச்சி உள்ளிட்ட மாநகர் பகுதிகளில் கேமராக்கள் பொருத்தும் பணி நடைபெற உள்ளது என்றார்.

போக்குவரத்து துறையில் உள்ள காலிப் பணியிடங்களுக்கு விகிதாசார அடிப்படையில் நிரப்ப உள்ளதாகவும் தேர்தல் மற்றும் பண்டிகைகள் முடிந்தவுடன் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று கூறினார்.

தற்போது போக்குவரத்துத்துறை 48,154 கோடி  நட்டத்தில் உள்ளது. அதனை சரி செய்வதற்கு தொழிற்சங்க செயலாளர்கள் கூட்டத்தை கூட்டி உள்ளதாகவும் தொழிலாளர்களுக்கான அரசு திமுக தொழிலாளர்களின் கோரிக்கையை கேட்டறிந்து அரசு பரிசீலனை செய்து முதல்வரின் ஆலோசனைப்படி தீர்வு காணப்படும் என்றார்.

Tags:    

Similar News