பெங்களுரு மருத்துவமனையில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அனுமதி

உடல்நலக் குறைவு காரணமாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Update: 2023-08-12 11:19 GMT

சேலம் மாவட்டத்தில் உள்ள பாரதி வித்யாலயா பள்ளியின் பவள விழா நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் அன்பில் மகேஷ் மற்றும் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என். நேரு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதை தொடர்ந்து கிருஷ்ணகிரி, வேலூர், திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள தனியார் பள்ளிகளுக்கு தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை சார்பில் அங்கீகார ஆணைகள் வழங்கும் விழாவில் கலந்து கொண்ட அமைச்சர் அன்பில் மகேஷ் 408 தனியார் பள்ளிகளுக்கான அங்கீகார ஆணைகளை வழங்கினார்.

இந்நிலையில் அரசு விழாவுக்காக கிருஷ்ணகிரிக்கு செல்லும் வழியில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது . இதை தொடர்ந்து கிருஷ்ணகிரி அருகே உள்ள காரிமங்கலத்தில் உள்ல தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் வயிற்று வலி காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

சேலத்தில் இருந்து கிருஷ்ணகிரி சென்றபோது அவருக்கு திடீரென நெஞ்சுவலிப்பதாக கூறியதால், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.காரிமங்கலம் தனியார் மருத்துவமனையில் அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர் அங்கிருந்து பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் தற்போது அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவர் தற்போது நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர்.

மருத்துவமனையில் அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவருக்கு அஜீரண கோளாறு, வாயுத்தொல்லை ஏற்பட்டுள்ளதாகவும் அதற்கான சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் அன்பில் மகேஷ் தற்போது நலமுடன் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Tags:    

Similar News