தர்மபுரி அருகே மின்சாரம் தாக்கி மக்னா யானை உயிரிழப்பு -வனத்துறையினர் விசாரணை

வயல்வெளிகளில் நுழையும் யானைகள் இதுபோன்று மின்சாரம் தாக்கி உயிரிழப்பது தொடர்கதையாக உள்ளது.

Update: 2022-05-13 04:25 GMT

தர்மபுரி அருகே மின்சாரம் தாக்கி மக்னா யானை உயிரிழப்பு- வனத்துறையினர் விசாரணை.

தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட எல்லையில் அமைந்துள்ள மாரண்டஅள்ளி, பஞ்சப்பள்ளி, தேன்கனிக்கோட்டை உள்ளிட்ட வனப் பகுதிகளில் யானைகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. இங்குள்ள யானைகள், கோடை காலங்களில் உணவு தேடி குடியிருப்பு பகுதிகளுக்கும், விவசாய நிலங்களுக்குள் நுழைந்து பயிர்களை சேதப்படுத்துவது வழக்கம்.

இந்நிலையில் தருமபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அடுத்த சாமனூர் வருவாய் கிராமத்தில் உள்ள நல்லம்பட்டி யில நேற்று மக்னா யானை இரவு உணவு தேடி வனப்பகுதியை விட்டு விவசாய நிலங்களுக்குள் நுழைந்துள்ளது. இந்நிலையில் நல்லாம்பட்டி சேர்ந்த கோவிந்தன் மகன் சீனிவாசன் என்பவர், தனது விவசாய நிலத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள நெல் வயலில் வன விலங்குகள் நுழைவதை கண்காணிக்க மின் விளக்கு அமைத்துள்ளார்.

இந்நிலையில் உணவு தேடி வந்த மக்னா யானை நேற்று இரவு நெல் பயிருக்கு நுழைந்து உள்ளது. அப்பொழுது வயலில் இருந்த மின் விளக்கிற்கு வந்து செல்லும், மின் வயரில் சிக்கி மின்சாரம் தாக்கியதில் நெல் வயலிலேயே மக்னா யானை உயிரிழந்துள்ளது. தொடர்ந்து இன்று காலை மக்னா யானை மின்சாரம் தாக்கி உயிரிழந்ததை அறிந்த கிராம நிர்வாக அலுவலர் அன்பு மற்றும் அக்கம் பக்கத்தினர் பாலக்கோடு வனச்சரகர் செல்வத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர் மக்னா யானை உயிரிழப்பு குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் யானையின் உடலை பிரேதப் பரிசோதனை செய்ய மருத்துவர் வர வழைக்கப்பட்டு, பிரேத பரிசோதனைக்கு பிறகு அதே இடத்தில் மக்னா யானை உடலை அடக்கம் செய்யவுள்ளனர். தொடர்ந்து உணவு தேடி குடியிருப்புகளுக்கு நுழைவதும், வயல்வெளிகளில் நுழையும் யானைகள் இதுபோன்று மின்சாரம் தாக்கி உயிரிழப்பது தொடர்கதையாக இருந்து வருகிறது. இதனை தடுப்பதற்கு வனத் துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News