குறைந்த விலையில் கரும்பை கொள்முதல் செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை : அமைச்சர்

தமிழக உணவு பாதுகாப்பு துறை அமைச்சர் சக்கரபாணி மதுரை விமான நிலையத்தில் அளித்த பேட்டியில் இதைத் தெரிவித்தார்

Update: 2022-01-13 03:30 GMT

குறைந்த விலையில் கரும்பு கொள்முதல் செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் சக்கரபாணி  தெரிவித்தார்.

சென்னையிலிருந்து மதுரை விமான நிலையம் வந்த தமிழக உணவு பாதுகாப்புத்துறை அமைச்சர் சக்கரபாணி இன்று செய்தியாளர்களை சந்தித்தபோது மேலும் கூறியதாவது: திருத்தணியில்  மகன் தற்கொலை சம்பவத்தில் தந்தை மீது தமிழக அரசு வழக்கு பதிவு செய்துள்ளது. பொங்கல் தொகுப்பில் பல்லி இறந்து கிடந்ததாக குற்றம்சாட்டப்பட்ட நபரிடம் கோட்டாட்சியர் சம்பந்தப்பட்ட பொருளை கொண்டு வர கேட்டபோது அவர் வேறு பொருளை மாற்றிக் கொண்டு வந்ததால் அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் விதமாக நடந்து கொண்டதால் வழக்கு பதிவு செய்யப்பட்டது .

கரும்பு கொள்முதல் அரசு நிர்ணயித்த விலையை விட குறைந்த விலைக்கு அதிகாரிகள் கொள்முதல் செய்ததாக விவசாயிகள் புகார் கூறியுள்ளனர். இது  சம்பந்தமாக முதல்வர் விவசாயிகளுக்கு அரசு நிர்ணயித்த விலையை கொடுக்க வேண்டும் என கூறியிருக்கிறார் . இந்த அடிப்படையில்தான் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது .இதில் எந்த தவறும் நடக்கவில்லை என தெரிவித்தார் .

குறைந்த விலைக்கு கொள்முதல் செய்ததாக சுட்டிக்காட்டினால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகம் முழுவதும் 2 கோடியே 15 லட்சம் குடும்ப அட்டைகளுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க வேண்டும் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் 90% வழங்கப்பட்டுள்ளது. மதுரையை பொருத்தவரை 80% வழங்கப்பட்டுள்ளது. ஓரிரு தினங்களில் அனைவருக்கும் வழங்கப்படும் எனவும்  அமைச்சர் சக்கரபாணி தெரிவித்தார்.

Tags:    

Similar News