சமூக நீதி நாள்: மதுரையில் அமைச்சர் தலைமையில் உறுதி மொழி ஏற்பு

எம்பி சு.வெங்கடேசன், ஆட்சியர் அனீஷ் சேகர், மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன், எம்எல்ஏ பூமிநாதன் ஆகியோர் பங்கேற்றனர்

Update: 2021-09-17 14:42 GMT

தந்தை பெரியார் பிறந்த தினமான செப்டம்பர் 17 -ஆம் நாள் ஆண்டுதோறும் "சமூகநீதி நாள்" ஆக கொண்டாடும் விதமாக அனைத்து அரசு அலுவலங்களிலும் உறுதிமொழி எடுத்துக்கொள்ள தமிழ்நாடு அரசு உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி, மதுரை மாநகராட்சி அறிஞர் அண்ணா மாளிகை ஸ்மார்ட் சிட்டி கருத்தரங்கு கூடத்தில் "சமூகநீதி நாள்" உறுதிமொழியை,நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர்பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், தலைமையில் இன்று (17.09.2021) ஏற்கப்பட்டது.

இந் நிகழ்ச்சியில், நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், மாவட்ட ஆட்சித் தலைவர் அனீஷ் சேகர், மாநகராட்சி ஆணையாளர்  கா.ப.கார்த்திகேயன், சட்டமன்ற உறுப்பினர் பூமிநாதன், தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத் தலைவர் என்.ஜெகதீசன், நகரப்பொறியாளர் (பொ) சுகந்தி உட்பட மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டு உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.

உறுதிமொழி: பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற அன்பு நெறியும் - யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற பண்பு நெறியும் எனது வாழ்வியல் வழிமுறையாகக் கடைப்பிடிப்பேன். சுயமரியாதை ஆளுமைத் திறனும் பகுத்தறிவுக் கூர்மைப் பார்வையும் கொண்டாக என்னுடைய செயல்பாடுகள் அமையும்! சமத்துவம், சகோதரத்துவம், சமதர்மம் ஆகிய கொள்கைகளுக்காக என்னை நான் ஒப்படைத்துக் கொள்வேன். மானுடப் பற்றும் மனிதாபிமானமும் ஒன்றே எனது இரத்த ஒட்டமாக அமையும். சமூக நீதியையே அடித்தளமாகக் கொண்ட சமுதாயம் அமைக்கும் எனது பயணம் தொடர இந்த நாளில் உறுதி ஏற்கிறேன்.

Tags:    

Similar News