பெண்களின் முன்னேற்றத்துக்கு திமுக அரசு துணை நிற்கும்: அமைச்சர் மூர்த்தி

தற்போது, தமிழக அரசு மிகப் பெரிய நெருக்கடியை சந்தித்து வரும் சூழலிலும், பத்தாயிரம் கோடி வரை நலத்திட்டங்களுக்கு ஒதுக்கீடு செய்து தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது என்றார் அமைச்சர் மூர்த்தி.

Update: 2021-07-18 15:36 GMT

பெண்களின் முன்னேற்றத்திற்கு உறுதுணையாக இருக்கும் அரசாக திமுக திகழ்கிறது என்றார்  வணிகவரி மற்றும் பத்திர பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி 

மதுரை பாண்டிகோவில் அருகேயுள்ள தனியார் மண்டபத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சகம் சார்பில், ஏழை பெண்களுக்கு திருமண நிதி உதவி, மற்றும் தாலிக்கு தங்கம் வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர்  அனீஸ்சேகர் தலைமையில்  நடைபெற்றது.

இதில் , வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி மற்றும் நிதி மற்றும் மனிதவளத்துறை அமைச்சர் பிடிஆர். பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் பங்கேற்று  4.50 கிலோ மதிப்பிலான தங்கம் மற்றும் 2 கோடி ரூபாய் நிதிஉதவி  என 549 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி  வழங்கப்பட்டது. தொடர்ந்து, கிழக்கு தாலுக்காவிற்குட்பட்ட 91 பயனாளிகளுக்கு  63.70 லட்சம் மதிப்புள்ள இலவச வீட்டுமனை பட்டாவை வழங்கினர். 

 நிகழ்ச்சியில், பங்கேற்ற நிதி மற்றும் மனித வள மேலாண்மைத்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசும்போது: திமுகவின் அடிப்படைக் கொள்கையாக உள்ள பெண்களுக்கான சமஉரிமை வழங்கும் முறையை உலக அளவில் ஒப்பிடுகையில் சமுதாய முன்னேற்றம் அடைவதற்கு  காரணமாக அமைந்திருக்கிறது.

தமிழகத்தில் 18 வயது கீழ் பெண்கள் கல்வியில் இடைநிற்றல் இல்லாமல் உள்ளது. ஆனால், பல வடமாநிலங்களில் 18 வயதுக்கு கீழ் உள்ள பெண்கள் கல்வி பெறாமல் இருந்து வரும் மாநிலங்களில் பொருளாதார வளர்ச்சியே அடைய வில்லை.மற்ற வடமாநிலங்களை விட, தமிழகம் வளர்ந்த நாடுகளுக்கு இணையாக உள்ளதற்கு இம்மாதிரியான திட்டங்களால் தான். தொடர்ந்து இம்மாதிரியான இலவச திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்படும்  என்றார்.

பின்னர், வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி செய்தியாளர்களிடம்  கூறியது: பெண்களுக்கென இலவச பஸ் பாஸ் உள்ளிட்ட பல்வேறு வகைகளில் பெண்களின் முன்னேற்றத்திற்கு உறுதுணையாக இருக்கும் அரசாக திமுக திகழ்ந்து வருகிறது. தற்போது, மிகப் பெரிய நெருக்கடியை சந்தித்து வரும் சூழலிலும் பத்தாயிரம் கோடி ரூபாய் வரையில் நலத்திட்டங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. மேலும், முதல்வருடன் கலந்தாலோசித்து பல்வேறு வகைகளில் வருவாய் ஈட்டுவதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என்றார்  அவர் . இந்த நிகழ்ச்சியில்,  மதுரை மாநகராட்சி ஆணையாளர் டாக்டர். கார்த்திக்கேயன் உள்ளிட்டோர்  கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News