கூலித் தொழிலாளியிடம் பணம் பறித்த வழக்கு: காவல் ஆய்வாளருக்கு 3 நாள் இடைக்கால ஜாமீன்
கூலித் தொழிலாளியிடம் பணம் பறித்த வழக்கில் காவல்ஆய்வாளர் வசந்திக்கு 3 நாட்கள் இடைக்கால ஜாமீன் - உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.;
கூலித் தொழிலாளியிடம் பணம் பறித்த வழக்கில் காவல் ஆய்வாளர் வசந்திக்கு 3 நாட்கள் இடைக்கால ஜாமீன் வழங்கி உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறபித்துள்ளது.
மதுரையை சேர்ந்த காவல் ஆய்வாளர் வசந்தி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் ஜாமின் கோரி மனு தாக்கல் செய்திருந்தார். அதில், "நாகமலை புதுக்கோட்டை காவல் நிலையத்தில், காவல் ஆய்வாளராக பணியாற்றி வந்தேன். ஜூலை மாதம் கூலித் தொழிலாளியிடம் ரூபாய் 10 லட்சம் பறிமுதல் செய்ததாக என் மீது தொடரப்பட்ட வழக்கில் தனக்கு ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி புகழேந்தி முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது, மனுதாரர் தரப்பில், மனுதாரரின் இல்ல நிகழ்விற்காக (பூப்புனித நீராட்டு விழா) கலந்து கொள்ள வேண்டி ஜாமீன் வழங்க கோரிக்கை வைக்கப்பட்டது. இதையடுத்து, நீதிபதி பிறப்பித்த உத்தரவு காவல் ஆய்வாளர் வசந்திக்கு 3 நாட்களுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி, உரிய காவல்துறை பாதுகாப்புடன் இருக்க வேண்டும். மேலும், வீட்டில் இருந்து வெளியே செல்லவோ, கைபேசி உயோகிக்கவோ, மற்ற நபர்களுடன் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தொடர்பு கொள்ள கூடாது. மேலும், மனுதாரர் காவல்துறைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை அக்டோபர் 7 ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.