அமைச்சர் தொகுதியில் மனிதக் கழிவுகளை வெறும் கைகளால் அள்ளும் அவலம்: கண்டுகொள்ளுமா மாநகராட்சி?

மனிதக் கழிவுகளை பாதுகாப்பு உபகரணங்கள் ஏதும் இல்லாமல் வெறும் கைகளால் அள்ளும் தூய்மை பணியாளர்கள். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?

Update: 2023-02-23 14:53 GMT

பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் வெறும் கைகளில் சுத்தம் செய்யும் துப்புரவு பணியாளர்கள் 

நிதி அமைச்சரும் மத்திய தொகுதி எம்எல்ஏவுமான, பி டி ஆர் பழனிவேல் ராஜன், தொகுதியான மதுரை மாநகராட்சிக்கு 75 வது வார்டு வசந்த நகர் இரண்டாவது தெருவில் கடந்த 10 நாட்களுக்கு மேலாக பாதாள சாக்கடை நீரானது சாலையில் வழிந்து ஓடுகிறது.

இதனை தூய்மைப்படுத்தும் பணியில், மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்கள். அப்பொழுது, மாநகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு மாநகராட்சி அதிகாரிகள் தூய்மை பணியாளர்களுக்காக வழங்க வேண்டிய எவ்வித பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படவில்லையாம்.

உச்ச நீதிமன்ற உத்தரவுபடி மனிதக்கழிவுகளை கையில் அள்ளுவது சட்டப்படி குற்றமாகும். மேலும், விஷவாயு தாக்கி அபாயம் இருப்பதாலும் தூய்மை பணியாளர்கள் வெறும் கைகளால் கழிவுகளை எடுப்பதால் அவர்களுக்கு நோய் தொற்று ஏற்படும் அபாயமும் உள்ளது என, சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டை முன் வைக்கின்றனர்.

எவ்வளவோ நவீன இயந்திரங்கள் வந்திருந்தாலும் மனித கழிவுகளை இன்னும் மனிதர்களை அள்ளும் அவலம் மதுரை மாநகராட்சியில் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது.

கடந்த சில மாதங்களுக்கு முன் பாதாள சாக்கடை மின் மோட்டார் பழுது ஏற்பட்டு அதை சரி செய்ய முற்பட்ட பொழுது மூன்று தொழிலாளர்கள் விஷவாயு தாக்கி உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து, மாநகராட்சி நிர்வாகம் தொடர்ந்து அலட்சிய போக்குடன் தூய்மை பணியாளர்களுக்கு முக கவசம் அறிவுரை உள்ளிட்ட எவ்வித பாதுகாப்பு உபகரணங்களும் வழங்காமல் வெறும் கைகளாலேயே கழிவுகளை அகற்றியது அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

எனவே இது குறித்து மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கையை முன்வைக்கின்றனர்.

Tags:    

Similar News