மதுரை மாநகராட்சிக்கு புதிய வாகனங்கள்: கொடியசைத்து துவக்கி வைத்த மேயர்
புதை சாக்கடை குழாய்களில் சேரும் மண் கழிவுகளை பிரித்து உடனுக்குடன் எடுத்து அகற்றுவதற்காக 12 வாகனங்கள் வாங்கப்பட்டுள்ளன;
மதுரை மாநகராட்சி திடக்கழிவு மேலாண்மை பணிகளுக்காக வாங்கப்பட்ட புதிய வாகனங்களை பயன்பாட்டுக் காக மேயர் இந்திராணி பொன்வசந்த் , ஆணையாளர் சிம்ரன்ஜீத் சிங் ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர்.
மதுரை மாநகராட்சி பகுதிகளில் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணியின் கீழ் சாலைகள் அமைத்தல், மழைநீர் வடிகால்கள், பாதாளச்சாக்கடை பணிகள், தெருவிளக்குகள் பராமரித்தல், தூய்மை பணிகள் , கால்வாய்கள் தூர்வாருதல், மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு ஏற்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மதுரை மாநகராட்சிக்கு உள்பட்ட வார்டு பகுதிகளில் உள்ள புதை சாக்கடை குழாய்களில் அடிக்கடி அடைப்புகள் ஏற்படுவதை உடனடியாக சரிசெய்வதற்கு மாநகராட்சியில் கழிவுநீர் உறிஞ்சு வாகனங்கள் வாங்கப்பட்டு தொடர்ந்து பயன்படுத்தப் பட்டு வருகிறது.
தற்போது, புதை சாக்கடை குழாய்களில் சேரும் மண் கழிவுகளை பிரித்து உடனுக்குடன் எடுத்து அகற்றுவதற்கு ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் 12 புதிய வாகனங்கள் வாங்கப்பட்டுள்ளன. புதிதாக வாங்கப்பட்டுள்ள வாகனங்களை, மேயர் ஆணையாளர் ஆகியோர் பயன்பாட்டிற்கு கொடியசைத்து பயன்பாட்டிற்கு துவக்கி வைத்தனர்.
இந்த புதிய வாகனத்தின் மூலம், மதுரை மாநகராட்சி பகுதிகளில் உள்ள பாதாளச் சாக்கடைகளில் உள்ள மணல் அடைப்புகள் உடனுக்குடன் விரைந்து சரிசெய்யப்படும்.இந்நிகழ்வில், மண்டலத் தலைவர்கள் சரவணபுவனேஸ்வரி, பாண்டிச்செல்வி, சுவிதா, நகரப்பொறியாளர் அரசு, மக்கள் தொடர்பு அலுவலர் மகேஸ்வரன் மாமன்ற உறுப்பினர் முருகன், உதவி பொறியாளர் (வாகனம்) ரிச்சார்டு உட்பட மாநகராட்சி அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.