மதுரையில் அங்கன்வாடி மையம்,ரேஷன் கடை திறந்த அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

மதுரையில் அங்கன்வாடி மையம்,ரேசன் கடையை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் திறந்து வைத்தார்.

Update: 2024-06-18 13:44 GMT

மதுரையில் ரேஷன் கடை திறந்து வைத்த அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் குடும்ப அட்டைதாரர்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்கினார்.

மதுரை மத்திய சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட திடீர் நகர், மேலவாசல் பகுதிகளில் 24 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய அங்கன்வாடி மற்றும் நியாய விலைக்கடை கட்டிடங்களை, அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பொதுமக்களின் பயன் பாட்டிற்கு திறந்து வைத்தார்.

எல்லோருக்கும் எல்லாம் என்ற அடிப்படையில் அனைத்து தரப்பு மக்களுக்கும் அரசின் திட்டங்கள் முழுமையாக சென்றடைய வேண்டும் என்ற நோக்கில் தமிழகத்தில் அரசின் சார்பில் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன .

அதிலும் சமூகத்தின் விளிம்பு நிலையில் உள்ள ஏழை எளிய மக்கள் அதிகம் வாழ்கின்ற திடீர் நகர்,மேல வாசல் பகுதியில் தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து எண்ணற்ற திட்டப்பணிகளை, தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரும் அமைச்சருமான பழனிவேல் தியாகராஜன் நிறைவேற்றி தந்துள்ளார்.

இதன் வரிசையில் தற்போது,மதுரை மாநகராட்சி வார்டு எண் 76 மேலவாசல் பகுதியில் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து 12 லட்சம் மதிப்பீட்டில் புதிய அங்கன்வாடி கட்டிடத்தையும்,திடீர் நகர் பகுதியில் 12 லட்சம் மதிப்பீட்டில் புதிய நியாய விலைக்கடை கட்டிடத்தையும், பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார் .

மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி பொன் வசந்த் மாநகராட்சி ஆணையாளர் தினேஷ்குமார் மத்திய மண்டல தலைவர் பாண்டி செல்வி மாமன்ற உறுப்பினர் கார்த்திக் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து, நியாயவிலைக் கடையில், பொது மக்களுக்கு, அரசின் சார்பில் வழங்கப்படும் பொருட்களின் விநியோகத்தை பார்வையிட்டார். கூட்டுறவு சங்கங்களின் மதுரை மண்டல இணைப் பதிவாளர் குருமூர்த்தி மற்றும் பாண்டியன் கூட்டுறவு வங்கி அலுவலர்கள் உடன் இருந்தனர்.

இதனைத் தொடர்ந்து, 76 வது வார்டு மாமன்ற உறுப்பினர் அலுவலகத்தை, அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் திறந்து வைத்தார்.இந்த நிகழ்ச்சிகளில் திமுக  நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News