மதுரையில் ஓய்வு பெற்ற மில் அதிகாரி வீட்டில் 110 பவுன் நகை கொள்ளை: க்ரைம் செய்திகள்

மதுரையில் ஓய்வு பெற்ற மில் அதிகாரி வீட்டில் 110 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்ற வழக்கில் மூன்று இளைஞர்களை போலீஸார் கைது செய்தனர்.

Update: 2023-03-19 06:46 GMT

மதுரை கோரிப்பாளையம் கான்சாபுரம் மெயின் ரோட்டை சேர்ந்தவர் அந்தோணி (வயது 83). இவர், ஓய்வு பெற்ற மில் அதிகாரியாவார். இவர் வெளியூர் சென்றிருந்த நேரம் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்த அடையாளம் தெரியாத நபர்கள் பீரோவில் இருந்த 110 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்று விட்டனர். இந்த கொள்ளை சம்பவம் குறித்து அந்தோணி தல்லாகுளம் காவல் நிலையத்தில் புகார் செய்தார் .

போலீஸார் வழக்கு பதிவு செய்து கொள்ளை தொடர்பாக விசாரணை நடத்தி வந்தனர். அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளையும் ஆய்வு செய்தனர். விசாரணைக்கு பின்னர், இதில் கொள்ளை சம்பவம் தொடர்பாக கோரிப்பாளையம் கான்சாபுரம் விஜயகுமார் (36), திருவேடகம் கணேசன் (46), காளவாசல் வெள்ளைக்கண்ணு தியேட்டர் ரோடு செல்வகுமார் (33) ஆகிய மூவரையும் போலீஸார் கைது செய்தனர்.

கைதான மூன்று பேரிடம் ஏழரை பவுன் தங்க நகைகளையும், பணம் ரூபாய் எட்டு லட்சத்து ஆயிரத்தையும், மூன்று இருசக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்தனர். மீதமுள்ள நகைகள் பற்றி விசாரித்த போது 80 பவுன் தங்க நகைகளை 25 லட்சம் ரூபாய்க்கு தனியார் நிதி நிறுவனத்தில் கொள்ளையர்கள் அடகு வைத்தது தெரிய வந்தது. இது தொடர்பாக போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

போட்டோ-வீடியோ படம் எடுத்த 5 இளைஞர்கள் கைது:

மதுரை டி ஆர் ஓ காலனியில் நடுரோட்டில் இருசக்கர வாகனங்களை நிறுத்தி ஐந்து இளைஞர்கள் விதவிதமாக வீடியோ படமும் செல்போனிலும் படம் எடுத்துக் கொண்டிருந்தனர். இதனால் அந்த பகுதியில் பொதுமக்கள் செல்ல முடியாமல் இடையூறாக இருந்தது. இது குறித்து தல்லாகுளம் போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

காவல் உதவி ஆய்வாளர் மகேந்திரன் தலைமையிலான போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்றனர். தொடர்ந்து, அங்கு பொதுமக்களுக்கு இடையூறாக நடுரோட்டில் இருசக்கர வாகனங்களை நிறுத்தி செல்போனிலும் வீடியோவுடன் படம் எடுத்துக் கொண்டிருந்த ஐந்து இளைஞர்களையும் பிடித்தனர் .அவர்களிடம் இருந்து இரண்டு பைக்குகள் ,நான்கு செல்போன்களையும் போலீஸார் பறிமுதல் செய்தனர்.

பிடிபட்ட இளைஞர்களிடம் விசாரித்தபோது அவர்கள் செல்லூர் சிவகாமி நகர் விபின்குமார், அதே பகுதியைச் சேர்ந்த தமிழ்செல்வன், முத்துப்பாண்டி, சூர்யா, ஜெயகிரி ஆகியோர் என்று தெரியவந்தது. அவர்களை போலீஸார் கைது செய்தனர்.

திருப்பரங்குன்றத்தில் பணம் வைத்து சூதாடிய 7 பேர் கைது:

மதுரை திருப்பரங்குன்றம் பொது கழிப்பிடம் அருகே புதரில் பணம் வைத்து சுதாடுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. திருப்பரங்குன்றம் போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று அங்கு பணம் வைத்து சூதாடிய ஏழு பேரை பிடித்தனர். அவர்களிடம் இருந்து சீட்டுக்கட்டுகளையும் சூதாடிய பணம் ரூ 690-யும் பறிமுதல் செய்தனர்.

பின்னர் பிடிபட்டவர்களிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர்கள் திருப்பரங்குன்றம் திருமலையூர் பாண்டி, ராஜீவ் காந்தி நகர் 5 ஆவதுதெரு ஜெயராமன், அதே பகுதியைச் சேர்ந்த ரஞ்சித்குமார், அழகர் , முத்து, கார்த்திக் , ராஜேந்திரன் என்று தெரியவந்தது. அவர்கள் ஏழு பேரையும் போலீஸார் கைது செய்தனர்.

Tags:    

Similar News