மதுரை கோமதிபுரத்தில் உள்ள இரண்டு ஆலைகளை ஆய்வு செய்ய அமைச்சர் உத்தரவு

ஆட்சியர், ஆணையர் ஆகியோர் உடனடியாக ஆய்வு செய்து இந்த இரண்டு ஆலைகள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

Update: 2023-09-16 07:15 GMT

 மதுரை கிழக்கு தொகுதியில் உள்ள கோமதிபுரம் ஜூபிலி டவுன் பகுதிகளில் சாலை அமைப்பதற்கான பணிகளை ஆய்வு செய்தார்

கோமதிபுரத்தில் உள்ள தனியார் நவீன அரிசி ஆலை மற்றும் தண்ணீர் சுத்திகரிப்பு ஆலைகளை மூட நடவடிக்கை எடுக்க  வேண்டுமென அதிகாரிகளுக்கு அமைச்சர் மூர்த்தி உத்தரவிட்டார்.

தமிழக வணிக வரித்துறை அமைச்சர் பி. மூர்த்தி, மதுரை கிழக்கு தொகுதியில் உள்ள கோமதிபுரம் ஜூபிலி டவுன் பகுதிகளில் சாலை அமைப்பதற்கான பணிகளை ஆய்வு செய்தார்.

அப்போது, ஜூபிலி டவுன் பகுதிகளில் சாலைகள் போடப்பட்டு, வருவதாகவும், இப்பகுதியில் உள்ள தனியார் நவீன அரிசி ஆலை, தனியார் தண்ணீர் சுத்திகரிப்பு நிலையம் ஆகியவற்றிற்கு வரும் எண்ணற்ற லாரிகளால், புதிதாக போடப்பட்டு வரும் சாலைகள் சேதமடைந்து பொதுமக்கள் பாதிக்கப்படுவதாக அடிக்கடி புகார் வருவதாகவும்,  இது குறித்து, மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா, மாநகராட்சி ஆணையர், மதுரை வருவாய் கோட்டாட்சியர் ஆகியோர் உடனடியாக ஆய்வு செய்து இந்த இரண்டு ஆலைகள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். மேலும், கோமதிபுரம் பகுதிகளில் போடப் பட்டுவரும் தார்ச்சாலையை பார்வையிட்டார்.

அமைச்சர் மூர்த்தி செய்தியாளர்களிடம் கூறியது: சாலைகள் மேம்பாடு பொதுமக்கள் நலத்தின் கருத்தில் கொண்டு அமைக்கப்பட்டு வருகிறது .சாலையில் உரிய தரத்தில் போடப்பட வேண்டும். மேலும், மக்களின் அடிப்படை வசதிகளுக்கு இந்த அரசு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது.மக்கள் எடுத்துரைக்கும் பிரச்னைகளை உடனடியாக தீர்க்கும் முயற்சியில் நாங்கள் ஈடுபட்டிருக் கிறோம் என்றார் அமைச்சர் பி மூர்த்தி.

அமைச்சருடன், மதுரை மாவட்ட ஆட்சியர் பி சங்கீதா, மாநகராட்சி ஆணையாளர், மதுரை வருவாய் கோட்டாட்சியர், மாநகராட்சி பொறியாளர் அரசு, மற்றும் ஜூபிலி டவுன் குடியிருப்பு நலச் சங்க நிர்வாகிகள், காங்கிரஸ் பிரமுகர் சாமிக்காளை, திமுக கிளை நிர்வாகிகள் உள்ளிட்டோர் அமைச்சரிடம், சாலை மேம்பாட்டு பணிகள் பற்றி எடுத்துரைத்தனர். இதையடுத்து, மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா, வருவாய் கோட்டாட்சியரிடம், தனியார் ஆலைகளை உடனடியாக ஆய்வு செய்ய உத்தரவிட்டார்.

Tags:    

Similar News