கருணை அடிப்படையில் அரசு வேலை பெற திருமணமான வாரிசுகளுக்கும் உரிமை உள்ளது.. நீதிமன்றம் தீர்ப்பு…

திருமணமான வாரிசுகளுக்கு கருணை அடிப்படையிலான வேலையை பெற உரிமை உள்ளது என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்து உள்ளது.

Update: 2023-03-08 12:54 GMT

சென்னை உயர் நீதிமன்றம். (கோப்பு படம்).

விழுப்புரம் மாவட்டத்தில் சத்துணவுத் திட்டத்தில் உதவி சமையலராக பணியாற்றிய பெண், உடல் நலக் குறைவு காரணமாக கடந்த 2014 ஆம் ஆண்டு ஜனவரி 26 ஆம் தேதி மரணமடைந்தார். இதையெடுத்து, கருணை அடிப்படையில் தனக்கு பணி வழங்கக் கோரி அவரது மகள் சரஸ்வதி, அதே ஆண்டில் ஜூன் மாதம் விண்ணப்பம் செய்தார். அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் 2017 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மீண்டும் விண்ணப்பித்தார்.

ஆனால், மூன்று ஆண்டுகளுக்கு பின் விண்ணப்பித்து உள்ளதாக கூறி, அவரது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த தனி நீதிபதி, மூன்று ஆண்டுகளுக்கு முன்பே விண்ணப்பித்துள்ள போதும், திருமணமானவர் என்பதால் கருணை அடிப்படையில் பணி நியமனம் பெற உரிமை இல்லை எனக் கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு வழக்கின் விசாரணை, சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் சுப்பிரமணியன் மற்றும் திலகவதி ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், சத்துணவு திட்டம் தொடர்பான அரசு உத்தரவுகளில், கருணை அடிப்படையில் பணி நியமனம் கோரி விண்ணப்பிக்க எந்த கால வரம்பும் நிர்ணயிக்கப்பட இல்லை என்றும், மணமான பெண்கள் கருணை அடிப்படையில் பணி நியமனம் கோர உரிமை இல்லை என்ற கர்நாடகா அரசின் உத்தரவை உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளதையும் சுட்டிக்காட்டி, தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்தது.

மேலும், மனுதாரரின் கல்வித்தகுதிக்கு ஏற்ற பணியை வழங்கவும் நீதிபதிகள் சுப்பிரமணியன், திலகவதி ஆகியோர் உத்தரவிட்டனர்.

Tags:    

Similar News