இரட்டை இலை சின்னத்தை முடக்கக் கோரிய வழக்கு: அபராதத்துடன் தள்ளுபடி

அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை முடக்கக் கோரிய வழக்கை ரூ.25,000 அபராதத்துடன் சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

Update: 2022-07-07 07:06 GMT

சென்னை உயர்நீதிமன்றம் (கோப்பு படம்).

அதிமுகவின் முன்னாள் உறுப்பினர் ஜோசப் என்பவர் சென்னை உயர்நீதிமன்றதில், மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில்,

அதிமுகவின் பொதுச்செயலாளர் பதவியை கைப்பற்றுவதற்கு முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 5 ஆயிரம் கோடி ரூபாய் செலவு செய்துள்ளதாகவும், ஜூலை 11 ஆம் தேதி நடக்கவிருக்கும் அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் மாவட்ட செயலாளர்களின் ஆதரவை பெறுவதற்காக மேலும் ஆயிரம் கோடி ரூபாய் செலவு செய்ய இருப்பதாகவும் ஒரு பத்திரிக்கை செய்தியை மேற்கோள் காட்டி, கட்சியின் மூத்த தலைவர்கள் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி இடையிலான இந்த பிரச்சினை, சாதி ரீதியிலான பிரச்சினையாக உருவெடுத்து மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைப்பை ஏற்படுத்தியுள்ளது.

இரட்டை இலை சின்னத்தை முடக்கி வைத்து அக்கட்சிக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திடம் கடந்த 28-ந்தேதி புகார் அளித்தும், அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே தனது மனுவை பரிசீலித்து அதிமுகவிற்கு எதிராக நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த வழக்கு இன்று தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி மாலா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் இந்த கட்சியில் உறுப்பினராக இருக்கிறாரா? அல்லது கட்சியின் கூட்டம் நடக்கக்கூடிய பகுதியில் வசிக்கிறாரா? என தலைமை நீதிபதி கேள்வி எழுப்பினார்.

இதற்கு மனுதாரர் தரப்பில் அவர் அதிமுகவில் உறுப்பினராக இல்லை என்றும், கட்சியின் கூட்டம் நடக்கக்கூடிய பகுதியில் வசிக்கவில்லை என்றும் பதில் அளிக்கப்பட்டது.

இதையடுத்து மனுதாரர் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்த உடனேயே உயர்நீதிமன்றதில் வழக்கு தாக்கல் செய்திருப்பதாக சுட்டிக்காட்டிய நீதிபதிகள், இந்த வழக்கு வெறும் விளம்பரத்திற்காக தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்று கூறி, ரூ.25,000 அபராதத்துடன் இந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

Tags:    

Similar News