எதிர்ப்பை மீறி காதல் திருமணம்: நடுரோட்டில் இளைஞர் வெட்டிக்கொலை

கிருஷ்ணகிரி அருகே காதல் திருமணம் செய்த இளைஞரை பெண் வீட்டார் நடுரோட்டில் ஓடஓட வெட்டிக்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2023-03-21 11:25 GMT

கொலை செய்யப்பட்ட ஜெகன்.

கிருஷ்ணகிரி அருகே காதல் திருமணம் செய்த இளைஞரை பெண் வீட்டார் நடுரோட்டில் ஓடஓட வெட்டிக்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம், கிட்டம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெகன் (வயது 28). டைல்ஸ் வேலை செய்து வரும் இவர், கடந்த மாதம் கிருஷ்ணகிரி மாவட்டம், அவதானப்பட்டி அடுத்த முழுக்கான் கொட்டாய் பகுதியைச் சேர்ந்த சங்கர் என்பவரின் மகள் சரண்யாவை காதலித்து வந்தார். இவர்களின் காதல் திருமணம் சரண்யாவின் பெற்றோருக்கு பிடிக்கவில்லை என கூறப்படுகிறது. மேலும் பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி கோவிலில் திருமணம் செய்துகொண்டதாக கூறப்படுகிறது. காதல் திருமணம் செய்த இருவரும் ஒரே சமூகத்தை சேர்ந்தவர்கள். இதனால் கோபமடைந்த சரண்யாவின் தந்தையும், உறவினர்களும் ஜெகனை கொலை செய்ய திட்டமிருந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், இன்று மதியம் ஜெகன் கிட்டம்பட்டியில் இருந்து டைல்ஸ் வேலை செய்வதற்கு காவேரிப்பட்டணம் நோக்கி பைக்கில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது ஜெகனை வழிமறித்த சரண்யாவின் தந்தை சங்கர் மற்றும் அவரது உறவினர்கள் கழுத்தை கத்தியால் அறுத்து உள்ளனர். நடுரோட்டிலேயே ஓட ஓட ஜெகனின் கழுத்தை அறுத்த சம்பவத்தால் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு விரைந்து வந்து பார்த்தனர். இதனையடுத்து, அப்போது சங்கர் மற்றும் அவருடன் வந்த உறவினர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

இதனையடுத்து காவேரிப்பட்டணம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த கொடூரக்கொலை குறித்து தகவல் அறிந்த காவேரிப்பட்டணம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். இதைத்தொடர்ந்து ஜெகனின் உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவத்தால் டேம் ரோடு பகுதியில் பெறும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த கொலை சம்பந்தமாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Tags:    

Similar News