கோடநாடு வழக்கு விசாரணை: இருவரின் போலீஸ் காவல் நிறைவு

கோடநாடு வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இருவரின் போலீஸ் காவல் முடிந்து போலீஸார் சிறைக்கு அழைத்து சென்றனர்.

Update: 2021-11-06 15:17 GMT

கோடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கின் கூடுதல் விசாரணை,  ஏ.டி. எஸ்.பி. கிருஷ்ணமூர்த்தி தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு,  பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த கொலை, கொள்ளை வழக்கிற்கு மூல காரணமாக இருந்த கார் ஓட்டுநர் கனகராஜ்,  சேலத்தில் விபத்தில் உயிரிழந்தார். இந்த வழக்கையும், தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். கனகராஜின் சகோதரர் தனபால் மற்றும் உறவினரான ரமேஷ் ஆகிய இருவரையும் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர்.

இதில், கோடநாடு கொள்ளை சதி திட்டம் குறித்து தனபாலுக்கு தெரிந்திருந்த நிலையில்,  போலீஸ் விசாரணையின் போது தெரிவிக்காமல் மறைத்தது, கனகராஜின் செல்போன் பதிவுகளை அழித்தது உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ்,  தனிபடை போலீசார் தனபால் மற்றும் உறவினர் ரமேஷை,  கடந்த 25 -ந்தேதி தனி படை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கூடலூர் கிளை சிறையில் அடைத்தனர்.

இவர்கள் இருவரையும் 10 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க உதகை மாவட்ட அமர்வு நீதி மன்றம் அனுமதி வழங்கியது. இருவரும் ரகசிய இடத்தில் வைத்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். வழக்கில் கனகராஜின் சகோதரர் தனபாலிடம் பதினோறு நாட்களும் ரமேஷிடம் பத்து நாட்கள் விசாரணை முடிந்த நிலையில்,  குன்னூரில் உள்ள நடுவர் நீதிமன்றத்தில், இன்று ஆஜர் படுத்தப்பட்டனர்.

நடுவர் நீதிமன்ற நீதிபதி ரமேஷ்,  இருவரையும் கூடலூர் கிளை சிறையில் அடைக்க உத்தரவிட்டார். அதன்படி, இருவரையும் போலீஸ் பாதுகாப்புடன் கூடலூர் கிளைச்சிறைக்கு கொண்டு சென்றனர்.

Tags:    

Similar News