போட்டித்தேர்வுக்கு இலவசமா பயிற்சி வகுப்புகளில் சேரணுமா? இதைப்படிங்க..

சென்னையில் வரும் 29ம் தேதி முதல் போட்டித்தேர்வு பயிற்சி வகுப்புகள் நடைபெறும் என போட்டித் தேர்வுகள் பயிற்சி மையம் தெரிவித்துள்ளது.

Update: 2022-10-17 12:26 GMT

பைல் படம்.

சென்னையில் வரும் 29ம் தேதி முதல் போட்டித்தேர்வு பயிற்சி வகுப்புகள் நடைபெறுகிறது. இப்பயிற்சி வகுப்புகளில் சேர விரும்புவோர் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து நேரிலோ அல்லது இமெயில் முகவரியிலோ விண்ணப்பிக்கலாம் என போட்டித் தேர்வுகள் பயிற்சி மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழக அரசின் தலைமைச் செயலாளரும், பயிற்சித் துறைத் தலைவருமான இறையன்பு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சென்னை போட்டித் தேர்வுகளில் கலந்து கொள்ளும் தேர்வர்களுக்கு தமிழக அரசின் சார்பில் சென்னை பழைய வண்ணாரப்பேட்டை சர் தியாகராயா கல்லூரி, நந்தனம் அரசினர் ஆடவர் கலைக் கல்லூரி ஆகிய இடங்களில் இயங்கும் போட்டித் தேர்வுகள் பயிற்சி மையங்களில் கட்டணமில்லாப் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது.

அண்மையில் நடைபெற்ற TNPSC Gr-IV எழுத்துத்தேர்வுக்கு இப்பயிற்சி மையங்களில் சிறந்த முறையில் பயிற்சிகள் வழங்கப்பட்டதன் மூலம் 440 தேர்வர்கள் பயனடைந்துள்ளனர். தற்போது, தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வாணையம் நடத்தும் இரண்டாம் நிலைக் காவலர், இரண்டாம் நிலை சிறைக்காவலர், தீயணைப்பாளர் ஆகிய பதவிகளுக்கான எழுத்துத் தேர்வுக்கு கட்டணமில்லா நேரடி பயிற்சி வகுப்புகள் இந்தப் பயிற்சி மையங்களில் வழங்கப்பட்டு வருகிறது.

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம், குரூப்-5ஏ.,வில் (தமிழ்நாடு தலைமைச் செயலகப் பணி) அடங்கிய உதவிப் பிரிவு அலுவலர், உதவியாளர் ஆகிய பதவிகளுக்கான 161 காலிப்பணியிடங்களை தமிழ்நாடு அமைச்சுப் பணி/ தமிழ்நாடு நீதி அமைச்சுப்பணியில் பணிபுரியும் தகுதி வாய்ந்த உதவியாளர் / இளநிலை உதவியாளர்களைக் கொண்டு பணி மாறுதல் மூலம் நியமனம் செய்வதற்கான எழுத்துத் தேர்விற்கு இப்பயிற்சி மையங்களில் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

இந்தத் தேர்வுக்கு விண்ணப்பித்து, இப்பயிற்சியில் பங்கேற்க விரும்பும் தமிழ்நாடு அமைச்சுப் பணி / தமிழ்நாடு நீதி அமைச்சுப்பணியில் பணிபுரியும் தகுதி வாய்ந்த உதவியாளர் / இளநிலை உதவியாளர்கள் https://www.civilservicecoaching.com/ என்ற இணையத்தள முகவரியில் சென்று பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து, விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ள சான்றிதழ்களுடன் 26/10/2022 வரை நந்தனம் அரசினர் ஆடவர் கலைக் கல்லூரியில் செயல்பட்டு வரும் போட்டித் தேர்வுகள் பயிற்சி மைய அலுவலகத்தில் நேரடியாகவோ அல்லது ceccrandanam@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ அனுப்பலாம். மேலும் விவரங்களுக்கு 9865808127. 9894541118, 8667276684, 6381481895 ஆகிய அலைபேசி எண்களைத் தொடர்பு கொள்ளலாம்.

இந்த போட்டித் தேர்விற்கான பயிற்சி வகுப்புகள் வரும் அக்டோபர் 29ம் தேதி, சனிக்கிழமை முதல் தொடங்கப்பட்டு, ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமைதோறும் நவம்பர் மாதம் வரை நடைபெறும். மேலும் இந்த போட்டித் தேர்வு பயிற்சி மையங்களில் மாதிரித் தேர்வுகளும் நடத்தப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு பயிற்சித் துறைத் தலைவர் இறையன்பு தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News