வெளிநாடு வாழ் தமிழர்களுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்ட அயலகத் தமிழர் நலத் துறை…

வெளிநாடுகளில் வாழும் தமிழர்களுக்கு உதவி புரியும் வகையில் முக்கிய அறிவிப்பை தமிழக அரசின் அயலகத் தமிழர் நலத் துறை வெளியிட்டுள்ளது.

Update: 2022-11-03 17:04 GMT

தமிழ்நாடு அயலகத் தமிழர் நலத் துறை.

இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு வேலைக்குச் செல்வோர் ஏமாற்றப்படுவது, கொடுமைப்படுத்தப்படுவது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இதற்கிடையே, தமிழ்நாட்டில் இருந்து வெளிநாடுகளுக்கு சுற்றுலா விசாவில் வேலைக்குச் செல்லும் சிலரை கட்டாயப்படுத்தி பல்வேறு மோசடி சம்பவங்களில் ஈடுபடுத்தப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளது. நாகப்பட்டினத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் அந்த மோசடி கும்பலிடம் மாட்டி மீண்டு வந்த சம்பவம் சமீபத்தில் நடந்தேறியது.

இதுதொடர்பாக வெளிநாடுகளில் உள்ள தமிழர்களுக்கு உதவிபுரியும் பணிக்காக செயல்பட்டு வரும் தமிழ்நாடு அரசின் "அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறை தற்போது முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:

தமிழ்நாட்டைச் சார்ந்த பல்வேறு உயர் தொழில்நுட்பக் கல்விப் பயின்ற இளைஞர்களை தாய்லாந்து, மியான்மர் மற்றும் கம்போடியா நாட்டில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் 'டிஜிட்டல் சேல்ஸ் அண்ட் மார்கெட்டிங் எக்ஸிகியூட்டிவ்' (Digital Sales and Marketing Executive) வேலைக்காக 'அதிக சம்பளம்' என்ற பெயரில் சுற்றுலா விசாவில் ஏமாற்றி அழைத்துச் செல்வதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

அவ்வாறு அழைத்துச் செல்லப்படும் இளைஞர்களை குறிவைத்து சிலர் கால்-சென்டர் மோசடி மற்றும் கிரிப்டோ கரன்சி மோசடி (Online scamming) போன்றவற்றில் கட்டாயப்படுத்தி ஈடுபடுத்தப்படுவதாகவும், அவ்வாறு செய்ய மறுக்கும் நிலையில் அவர்கள் துன்புறுத்தப்படுவதாவும் தொடர்ந்து தகவல் பெறப்பட்டு வருகிறது.

எனவே, இனிவரும் காலங்களில், இது போன்ற சம்பவங்கள் நிகழாமல் தடுக்க தமிழ்நாட்டில் இருந்து வெளிநாடுகளுக்கு வேலை நிமித்தமாக செல்லும் இளைஞர்கள், மத்திய அரசில் பதிவு செய்யப்பட்ட முகவர்கள் மூலம், வேலைக்கான முறையான விசா (சுற்றுலா விசாவில் வேலைக்கு செல்வது கூடாது), முறையான பணி ஒப்பந்தம், என்ன பணி? என்ற விவரங்களைச் சரியாகவும், முழுமையாகவும் தெரிந்து கொண்டு செல்ல வேண்டும்.

அவ்வாறான பணிகள் குறித்து உரிய விவரங்கள் தெரியாவிட்டால், தமிழ்நாடு அரசை அல்லது சம்பந்தப்பட்ட நாட்டில் உள்ள இந்தியத் தூதரகங்களை தொடர்பு கொண்டு, பணி செய்யப்போகும் நிறுவனங்களின் உண்மைத் தன்மையை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

மேலும், மத்திய அரசின் வெளியுறவுத்துறை மற்றும் வேலைக்குச் செல்லும் நாடுகளில் உள்ள இந்திய தூதரகங்களின் இணையதளங்களில் வெளியிடப்படும் அறிவுரைகளின் படியும், தாய்லாந்து, மியான்மர் மற்றும் கம்போடியா நாடுகளில் உள்ள இந்திய தூதரகங்களின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள அறிவுரைகளின் படியும் நடந்து கொள்ள வேண்டும்.

வெளிநாடு வாழ் தமிழர்களுக்கு ஏதாவது உதவி தேவைப்பட்டால் 9600023645, 8760248625 என்ற செல்போன் எண்களிலும் 044-28515288 என்ற தொலைபேசி எண்களிலும் தொடர்பு கொள்ளலாம் என தமிழக அரசின் அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்த் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News