நரபலி புகார் கூறிய பெண்ணுக்கு பாதுகாப்பு வழங்கப்படும்: நீதிமன்றத்தில் அரசு தகவல்

நரபலி கொடுக்க முயற்சிப்பதாக புகார் தெரிவித்த பெண்ணுக்கு பாதுகாப்பு வழங்கப்படும் என நீதிமன்றத்தில் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Update: 2023-02-23 12:31 GMT

சென்னை உயர் நீதிமன்றம். (கோப்பு படம்).

மத்திய பிரதேசம் மாநிலம் போபால் பகுதியைச் சேர்ந்த முதுகலை பட்டதாரி பெண் ஷாலினி சர்மா சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று ஒரு மனுவை தாக்கல் செய்தார். அந்த மனுவில், ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் மாணவர் பிரிவான அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் எனும் ஏ.பி.வி.பி. அமைப்பைச் சேர்ந்த தனது வளர்ப்புத் தாய் சுதா ஷர்மா, மாந்தரீகங்களிலும், மூட நம்பிக்கைகளிலும் நம்பிக்கை கொண்டவர் என தெரிவித்து உள்ளார்.

மேலும், தன்னை நரபலி கொடுக்க அவர் முடிவு செய்து உள்ளதாகவும், ஏற்கெனவே தனது 10 வயது சகோதரனையும், மேலும் இருவரையும் அவர் நரபலி கொடுத்து உள்ளதாகவும் ஷாலினி சர்மா மனுவில் குறிப்பிட்டுள்ளார். ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்தவர் என்பதால் அவருக்கு எதிராக போலீஸில் புகார் அளிக்க யாருக்கும் தைரியம் இல்லை என்றும் மனுவில் அவர் குறிப்பிட்டு உள்ளார்.

நரபலியில் இருந்து தப்பிப்பதற்காக தட்சிணாமூர்த்தி என்ற நண்பரின் உதவியுடன் பிப்ரவரி 17 ஆம் தேதி சென்னை வந்ததாகவும், தந்தைப் பெரியார் திராவிடர் கழக செயலாளர் வீட்டில் தங்கி இருக்கும் தன்னை, குடும்பத்தினரும், ஏ.பி.வி.பி. அமைப்பினரும் வலுக்கட்டாயமாக போபால் அழைத்துச் சென்று விடுவர் என்றும் மனுவில் ஷாலினி சர்மா தெரிவித்து உள்ளார்.

தன்னை அவர்கள் வலுக்கட்டாயமாக போபாலுக்கு கொண்டு சென்று விட்டால், தன்னை நரபலி கொடுக்கும் அபாயம் உள்ளது என்றும் தமிழ்நாடு பெண்களுக்கு பாதுகாப்பான இடம் என்பதால் தனக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க உத்தரவிட வேண்டும் என்றும் மனுவில் இளம்பெண் ஷாலினி சர்மா வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இந்த மனு, நீதிபதி சந்திரசேகரன் முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா ஆஜராகி மனுதாரருக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படும் எனவும், ஆன்லைனில் பெறப்பட்ட புகாரும் விசாரிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

அப்போது மனுதாரர் ஷாலினி சர்மா ஆஜராகி தனக்கு பாதுகாப்பு வழங்கிய தட்சிணாமூர்த்தி, விக்னேஷ் ஆகியோருக்கு காவல்துறை பாதுகாப்பு வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். இந்த நூற்றாண்டிலும் பில்லி சூனியம், மாந்திரீகம் ஆகியவற்றை நம்பி, நரபலி கொடுக்கப்படுவதாக கேள்விப்படுவது அதிர்ச்சி அளிப்பதாக நீதிபதி தெரிவித்தார்.

உதவி கேட்ட பெண்ணுக்கும், அவருக்கு உதவிய இருவருக்கும் உரிய பாதுகாப்பு வழங்க உத்தரவிட்ட நீதிபதி சந்திரசேகரந், வழக்கு குறித்து ஷாலினி சர்மாவின் பெற்றோர் பதில் அளிக்க உத்தரவிட்டார்.

மேலும், நரபலி தொடர்பாக ஷாலினி சர்மா புகார் அளித்த விவகாரத்தில் போபால் காவல் ஆணையர் அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை 3 வாரங்களுக்கு தள்ளிவைத்து நீதிபதி சந்திரசேகரன் உத்தரவிட்டார்.

Tags:    

Similar News