கொரோனா வைரஸ் எப்படி திடீரென உருமாற்றம் அடைகிறது?
கொரோனா வைரஸ் எப்படி திடீரென உருமாற்றம் அடைகிறது என்பது குறித்த விளக்கங்கள் உங்கள் பார்வைக்கு;
வைரஸ் எப்படி திடீரென உருமாற்றம் அடைகிறது?
உலகம் முழுக்க திடீரென பல்வேறு உருமாறிய கொரோனா வகை வைரஸ்கள் தோன்றி வருகின்றன. டெல்டா, பீட்டா, ஆல்பா, டெல்டா + என்று அடுத்தடுத்து பல்வேறு உருமாறிய கொரோனா வைரஸ்கள் தோன்றி வருகின்றன. மனித குலத்தை அச்சுறுத்தி ஆட்டிப்படைத்து வரும் கொரோனா வைரஸ் உருமாற்றம் அடைவதே ஒரு "திரில்லர் ஸ்டோரி"தான்.. இந்த வைரஸ் எப்படி திடீரென உருமாற்றம் அடைகிறது என்று தெரிந்து கொள்ள வேண்டுமா? தொடர்ந்து படியுங்கள்!
உலகம் முழுக்க இருக்கும் எல்லா உயிரினங்களுக்கும், செல்களுக்கும், வைரஸ்களுக்கும் இருக்கும் ஒரே குறிக்கோள், ஒரே பணி இனப்பெருக்கம் செய்வது மட்டுமே. ஒன்றில் இருந்து இரண்டாக, மூன்றாக பெருக்கம் அடைவதே உலகம் முழுக்க இருக்கும் அனைத்து உயிர்களுக்கும் இருக்கும் ஒற்றுமை. கொரோனா வைரஸின் நோக்கமும் இனப்பெருக்கம் அடைவதுதான்.
இந்த கொரோனா வைரஸ் எப்படி உருமாற்றம் அடைகிறது என்பதை தெரிந்து கொள்ளும் முன், இந்த கொரோனா வைரஸ் முதலில் எப்படி பெருக்கம் அடைகிறது என்பதை தெரிந்து கொள்ளவோம்.
கொரோனா
உலகில் இரண்டு வகையான வைரஸ்கள் உள்ளன. டிஎன்ஏ வைரஸ், ஆர்என்ஏ வைரஸ். ஒரு வைரஸில் டைஆக்சிரிபோநியூகிளிக் அமிலம் இடம்பெற்று இருந்தால் அது டிஎன்ஏ வைரஸ் என்றும், ரிபோநியூகிளிக் வகை அமிலம் இடம்பெற்று இருந்தால் அது ஆர்என்ஏ வைரஸ் என்றும் அழைக்கப்படும்.
மனிதர்களிடையே பரவும் கொரோனா வைரஸ் ஆர்என்ஏ வகை வைரஸ் ஆகும். இந்த ஆர்என்ஏ வகை கொரோனா உடலில் உள்ள செல்களில் நுழைவதற்கு அதில் இருக்கும் கூம்பு போன்ற பகுதிகள்தான் பயன்படுகின்றன.
ஸ்பைக் புரோட்டின் என்று அழைக்கப்படும் இந்த கூம்புகள் மூலம் கொரோனா மனித செல்களுக்குள் சென்று, அங்கு இனப்பெருக்கம் செய்கின்றன,. உடலில் இருக்கும் ஏற்பி வகை செல்களான ACE2 என்ற செல்களுக்குள் சென்றுதான் கொரோனா வைரஸ் பெருக்கம் அடையும். இந்த ACE2 வகை ஏற்பி செல்கள் எல்லா வைரஸையும் உள்ளே விடாது. சரியான வைரசை மட்டுமே அனுமதிக்கும். கொரோனாவின் ஸ்பைக் புரோட்டினில் இருக்கும் "எஸ்" என்ற புரோட்டின், ACE2 ஏற்பி செல்லை துளைத்து கொரோனா மனித செல்லுக்குள் கொண்டு செல்ல வழியை ஏற்படுத்தும். இப்படித்தான் கொரோனா மனித செல்களுக்குள் செல்கிறது.
உள்ளே வந்தவுடன் என்ன நடக்கும்?
மனித உடலுக்குள் செல்லும் கொரோனா வேகமாக பெருக்கம் அடைந்து புதிய கொரோனா வைரஸ்களை பிரதி எடுத்துக்கொண்டே இருக்கும். கொரோனா வைரஸில் இருக்கும் யு, எ, சி, ஜி போன்ற அமிலங்கள் சேர்ந்துதான் அதன் புரோட்டின்களை உருவாக்குகின்றன. இந்த புரோட்டின்கள்தான் கொரோனா வைரஸின் வீரியத்தை, சக்தியை தீர்மானிக்கும்.இப்படி பிரதி எடுக்கும் போது ஏற்படலாம் சிறிய "தவறால்" உருமாற்றம் ஏற்படுகிறது.
புரோட்டின்
யு, எ, சி, ஜி போன்ற அமிலங்கள் எந்த வரிசையில் இருக்கின்றன என்பதை பொறுத்தே கொரோனா வைரஸில் புரோட்டின்களும் தீர்மானிக்கப்படும். உதாரணமாக எ, சி, ஜி என்ற குழு டி என்ற புரோட்டினை உருவாக்கும். யு, எ, சி என்ற குழு பி என்ற புரோட்டினை உருவாக்கும். இப்படி கொரோனா வைரஸில் நிறைய புரோட்டீன்கள் இருக்கும். ஒரு கொரோனா வைரஸை எடுத்துக்கொண்டால் அதில் ஒரே வகையான சில புரோட்டின்கள் மட்டுமே வரிசைப்படி இருக்கும். இந்த புரோட்டீன்கள் மாற்றம் அடையாது.
உருமாற்றம்
அப்படி ஒருவேளை இந்த புரோட்டின் மாற்றம் அடைந்தால் அதுதான் உருமாற்றம். உதாரணமாக "டி - பி - எஸ்" என்று புரோட்டின் வரிசையின் திடீரென "டி - ஆர்- எஸ்" என்று மாற்றம் அடைந்தால் அதுதான் உருமாற்றம் ஆகும். இந்த கொரோனா வைரஸ் மனித உடலில் சென்று ஒன்றில் இருந்து பலவாக பிரதி எடுக்கும். அப்படி பிரதி எடுக்கும் போது ஏற்படும் தவறுகள் காரணமாக இந்த வரிசை மாற்றம் ஏற்படுகிறது. அப்போது புதிய கொரோனா வகை வைரசை ஏற்படுத்தும்.
உதாரணமாக சீனாவில் பரவிய கொரோனா வைரஸில் 614 ஸ்பைக் புரோட்டினில் டி என்ற புரோட்டின் இருந்தது. ஆனால் இந்த புரோட்டின் "டி"ல் இருந்து "ஜி" ஆக மாறியது. இந்த உருமாற்றம்தான் d614g வகை உருமாறிய கொரோனா என்று அழைக்கப்படுகிறது. கொரோனாவிற்கு உள்ளே புரோட்டின்கள் இப்படி பிரதி எடுக்கும் போது மாற்றம் அடைவதே உருமாற்றம் ஆகும்.
எதனால் இவ்வாறு நடக்கிறது
பொதுவாக ஆர்என்ஏ வகை வைரஸ்கள் பிரதி எடுக்கும் போது நிறைய தவறுகளை செய்யும். அப்படியே ஜீனோம்களை பிரதி எடுக்காமல் சில தவறுகளை செய்யும். இதனால்தான் மாற்றம் ஏற்படுகிறது. கொரோனா வைரஸ் ஆர்என்ஏ வகை என்பதால் இதுவும் பிரதி எடுக்கும் போது மாற்றம் நிகழ்கிறது. இதனால்தான் ஒரு நபரிடம் இருந்து இன்னொரு நபருக்கு கொரோனா வைரஸ் சென்று, அங்கு பெருக்கம் அடையும் போது, உருமாற்றம் அடைகிறது.
ஆபத்து
இந்த மாதிரியான உருமாற்றங்கள் மிகவும் ஆபத்தானது. உதாரணமாக இங்கிலாந்தில் கண்டறியப்பட்ட ஆல்பா வகை கொரோனாவில் "எஸ்" புரோட்டினே லேசாக உருமாற்றம் அடைந்துள்ளது. இந்த எஸ் புரோட்டின்தான் உடலுக்குள் செல்ல வழி ஏற்படுத்தும். எஸ் புரோட்டின் இன்னும் வேகமாக செல்லுக்குள் செல்லும் திறன் கொண்டதாக மாறியுள்ளது. அதாவது கொரோனா வைரஸின் துளைக்கும் திறன் அதிகரித்துள்ளது.
தடுப்பூசி
இந்தியாவில் அளிக்கப்படும் பல தடுப்பூசிகள் இந்த எஸ் புரோட்டினை வைத்தே உருவாக்கப்பட்டது. ஆனால் தற்போது அந்த எஸ் புரோட்டின் உருமாற்றம் அடைந்து ஆல்பா வகை கொரோனா வேகமாக பிரிட்டனில் பரவுகிறது. தென்னாப்பிரிக்காவில் ஆஸ்டர்செனகா வேக்சின் வேலை செய்யவில்லை என்று அறிவிக்கப்பட்டதற்கு காரணமும் இந்த எஸ் புரோட்டினில் மாற்றம் ஏற்பட்டதுதான்.
என்ன சிக்கல்
இந்த கொரோனா வைரஸின் உருமாற்றம் இப்போதைக்கு நிற்காது என்பதே இதில் சிக்கல். இது ஆர்என்ஏ வைரஸ் என்பதால் எங்காவது உலகில் ஒரு இடத்தில் உருமாறிக்கொண்டே இருக்கும். எதிர்கால உருமாற்றங்களில் புரோட்டின்கள் மொத்தமாக மாறும் வாய்ப்பு கூட இல்லை. ஒவ்வொரு புரோட்டினாக உருமாற்றம் அடையாமல் மொத்தமாக கொரோனாவின் புரோட்டின் உருமாறலாம். அப்படி மாறினால் தடுப்பூசிகள் போட்டவர்களுக்கு கூட மீண்டும் கொரோனா பாதிக்கும் சிக்கல் உள்ளது.
சவால்கள்
ஃபைசர் வேக்சின் போன்ற mRNA வகை தடுப்பூசிகள் நேரடியாக ஆர்என்ஏவை குறி வைப்பதால், அவை உருமாற்றம் அடைந்த கொரோனாவிற்கு எதிராக கொஞ்சம் நம்பிக்கை அளிக்கும். ஆனால் வரும் காலங்களில் ஏற்படும் உருமாற்றங்கள் காரணமாக கொரோனா அதற்கு கட்டுப்படாமல் போகலாம். கொரோனா வைரஸின் உருமாற்றத்தை தடுக்க முடியாத காரணத்தால், அது அடுத்து எப்படி மாறும், எவ்வளவு சக்தியை பெறும் என்று தெரியாது.
ஆர்என்ஏ வைரஸ் வேகமாக உருமாற்றம் அடைய கூடியது. கொரோனா வைரஸ் நினைத்ததை விட வேகமாக உருமாற்றம் அடையும். இதனால் 3 அலைகளோடு முடியாமல் கொரோனா இன்னும் பல அலைகளை ஏற்படுத்தும் வாய்ப்பு உள்ளது. உலகம் முழுக்க எல்லோருக்கும் தடுப்பூசி போடப்பட்டாலும் கூட எதிர்காலத்தில் திடீரென தடுப்பூசியில் தப்பிக்கும் உருமாறிய கொரோனா வைரஸ் தோன்ற அதிக வாய்ப்புகள் உள்ளன.