ஆன்லைன் லோன் ஆப்: நமக்கு நாமே வைத்துக்கொள்ளும் ஆப்பு

லோன் ஆப் மூலமாகக் கடன் பெறுவது என்பது டிஜிட்டல் கந்து வட்டி தொழில் போன்றது என்பது பலருக்கு தெரியாது

Update: 2022-04-09 04:21 GMT

தற்போது நாம் அனைவருமே ஸ்மார்ட் போன் பயன்படுத்துகிறோம். அதில் தேவையில்லாத ஆப்-களை டவுன்லோட் செய்து வைக்கிறோம். இதில் ஒன்றுதான்  கடன் பெறுவதற்கான லோன் ஆப்.

இது மிக சுலபமாக தோன்றலாம், ஆனால் அது நமக்கு நாமே வைத்துக்கொள்ளும் ஆப்பு என பலருக்கு தெரியாது.

லோன் ஆப் மூலமாகக் கடன் பெற்று உளவியல் ரீதியாகத் துன்புறுத்தலுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை அதிகம். கடனைத் திரும்பப் பெறுவதற்காக எந்த எல்லைக்கும் செல்கிற லோன் ஆப்-களிடம் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது முக்கியம்.

பணம் தேவைப்படுபவர் உடனடியாகக் கடன் கிடைக்கிறதே என லோன் தரும் அப்ளிகேஷன்களை கூகுள் பிளே ஸ்டோர் மூலம் தரவிறக்குகின்றனர். தொடர்பு எண் பட்டியல், புகைப்படங்கள் என நமது டேட்டாக்களுக்கான அக்சஸைக் கொடுத்தால்தான் இன்ஸ்டால் செய்ய முடியும் என்பது போல் அந்த ஆப்-கள் வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. இதன் பின்விளைவுகளை அறியாமல் அதற்கான அக்சஸைத் தந்துவிட்டு கடன் வாங்குகிறார்கள். அதில் தான் நாமே நமக்கு ஆப்பு வைத்துக் கொள்கிறோம்.

லோன் ஆப்-களை பொறுத்தவரை, பான் கார்டு, ஆதார் அட்டை ஆகியவற்றைக் கேட்பதற்கான தேவை இருக்கிறது. ஆனால், நமது மொபைலில் உள்ள தொடர்பு எண் மற்றும் புகைப்படங்களுக்கான அக்சஸ் கேட்பதற்கான தேவை இல்லை. எனவே, அந்த அனுமதியைத் தரக்கூடாது.


இப்படித்தான் நமது டேட்டாக்களை அவர்கள் திருடிக்கொண்டு, சமயம் பார்த்து அதை வைத்தே நம்மை மிரட்டுகின்றனர். கடனைத் திரும்பச் செலுத்தாதவர்களை உளவியல் ரீதியாக எப்படியெல்லாம் துன்புறுத்த முடியுமோ, அப்படி எல்லாம் துன்புறுத்துகிறார்கள்

கடன் வாங்கும் தொகையில் இருந்து 30% பணத்தை பிராசஸிங் ஃபீஸ் எனக் கூறி பிடித்தம் செய்துகொண்டு தான் தருகிறார்கள். முழுப் பணத்தையும் ஏழு நாள்களுக்குள் திரும்பச் செலுத்தும்படி அவகாசம் தரப்படுகிறது.

அந்த அவகாசம் முடிந்து கடன் தொகையைத் திரும்பச் செலுத்தாவிட்டால், நாளொன்றுக்கு ரூ.200 - ரூ.500 வரை கடன் தொகைக்கேற்ப வட்டி விதிக்கின்றனர். பணத்தைக் கட்டுமாறு முதலில் தொலைபேசி மூலம் மிரட்டல் விடுக்கிறார்கள்.

அதன் பிறகு தான் அவர்கள் ஆட்டம் ஆரம்பமாகும்.

நமது காண்டாக்ட் லிஸ்ட்டை அவர்கள் பார்க்க அனுமதி கொடுத்தோமில்லையா, அதன் மூலம் நமது தொடர்புப்பட்டியலில் உள்ள நண்பர்கள், உறவினர்கள் என அனைவருக்கும் நம்மை பற்றி தவறாகச் சித்திரித்து மெசேஜ் அனுப்புகின்றனர். இதுவே கடன் வாங்கியவர் பெண் எனில், அவரது கேலரியில் உள்ள புகைப்படங்களை தவறாகச் சித்திரித்துப் பரப்பிவிடுவோம் என்றும் மிரட்டுகின்றனர்.

அதுவாவது பரவாயில்லை. இன்னும் ஒருபடி மேலே போய், 'இந்த நபர் 15 வயது பெண்ணிடம் பாலியல் வன்முறையில் ஈடுபட்டு எஸ்கேப் ஆகி விட்டார். இவரைப் பார்த்தால், கீழே தரப்பட்டுள்ள குற்றப்பிரிவு எண்ணுக்குத் தெரிவியுங்கள்' என நமது தொடர்புப் பட்டியலில் உள்ள அனைவருக்கும் மெசேஜ் அனுப்பி விடுகின்றனர்.

கடன் பெற்றவர்களின் வயது மற்றும் பாலினத்துக்கேற்ப அவர்களைத் துன்புறுத்தும் விதமும் மாறுபடும். உன்னை பற்றிய தகவல்கள், தொடர்பு எண்கள் என்னிடம் உள்ளது. கடனை உடனே திருப்பி செலுத்தாவிட்டால், நீ இன்னும் அனுபவிப்பாய் என்பதை மிரட்டலாய் உணர்த்தி விடுகிறார்கள். அதன் பிறகு, இதற்கு பயந்தே கொள்ளை வட்டி என்றாலும், பலரும் பணத்தைக் கட்டிவிடுகின்றனர்.

இணைய வெளியில் நமது டேட்டாக்கள் பாதுகாப்பாக இருக்க எந்த உத்தரவாதமும் இல்லை. எனவே, இது போன்ற அப்ளிகேஷன்கள் மூலம் கடன் பெறுவதை முற்றிலும் தவிர்ப்பது நல்லது

கடந்த 2021-ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் இதுபோன்று லோன் அப்ளிகேஷன் மூலம் கடன் தந்து தொந்தரவு செய்த கும்பலைக் கண்டுபிடித்து கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து லோன் அப்ளிகேஷன்களை நீக்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும் தற்போது மீண்டும் செயல்படத் தொடங்கியிருக்கின்றன..

மொபைல் ஆப் மூலம் கடன் வாங்குவதை மக்கள் கட்டாயம் தவிர்க்க வேண்டும். அவை ரிசர்வ் வங்கியால் அங்கீகரிக்கப்பட்டவை அல்ல. இணைய வழியில் நடத்தப்படும் கந்து வட்டித் தொழில்தான் இது. எனவே, மக்கள் அனைவரும் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். கடன் வாங்கியவர்கள் அதிக வட்டி விதிக்கப்பட்டு அதைச் செலுத்தக் கூறி, உளவியல் ரீதியாகத் துன்புறுத்தப்பட்டால் உடனடியாக உங்கள் பகுதியில் உள்ள சைபர் கிரைம் பிரிவில் புகார் அளிக்கலாம்

இணையவெளியில் நமது டேட்டாக்கள் திருடப்படாது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை என்பதால், நாம்தான் மிகக் கவனமாகச் செயல்பட வேண்டும்

லோன் அப்ளிகேஷன்கள் எளிதில் அனைவரையும் ஈர்க்கும்படியாக விளம்பரப்படுத்தப்படுகின்றன. பான் கார்டு மற்றும் ஆதார் அட்டை இருந்தாலே போதும். உடனடியாகக் கடன் கிடைக்கும் என்கிறபோது பணத்தேவை உள்ளவர்கள் அதைப் பயன்படுத்தி கடன் பெறுகின்றனர். லோன் ஆப் மட்டுமல்ல, எந்த ஆப்-ஆக இருந்தாலும் இன்ஸ்டால் செய்யும்போது தொடர்பு எண் பட்டியல், புகைப்படங்கள், ஆடியோ, லொகேஷன் போன்றவற்றின் அக்சஸ்க்கான அனுமதி கேட்கும். கண்மூடித்தனமாக நாம் எல்லாவற்றுக்கும் அனுமதி தந்துவிடக் கூடாது. இதற்கும் நமது பயன்பாட்டுக்கும் என்ன தொடர்பு என்று யோசித்த பிறகே, அதை அனுமதிக்க வேண்டும்.

கடன் வாங்கும் மக்களே!. தூண்டிலில் இருக்கும் புழு மீனுக்கு உணவல்ல. இனி ஆன்லைன் ஆப் மூலம் கடன் வாங்கும்போது கவனமாக இருங்கள்

Tags:    

Similar News