சென்னையில் மழை: நான்கு மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை

Heavy Rain Today -மழை காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2022-11-01 00:46 GMT

Heavy Rain Today -தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த 29-ந் தேதி தொடங்கியது. வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ளநிலையில் தமிழகத்தில் பொதுமக்கள் உஷாராக இருக்கும் படி சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்தது. இதையடுத்து பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.

இந்த நிலையில் நேற்று காலை முதலே சென்னையில் சாரல் மழை பெய்ய தொடங்கியது. அதன் பின்னர் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மாலை 5 மணிக்கு மேல் மீண்டும் மழை பலமாகபலத்த மழை பெய்ய தொடங்கியது. நேரம் செல்லசெல்ல மழை வெளுத்து வாங்கியது. இடி-மின்னலும் மிரட்டியது.

எழும்பூர், புரசைவாக்கம், வேப்பேரி, பெரியமேடு, திருவல்லிக்கேணி, பட்டினப்பாக்கம், அயனாவரம், கீழ்ப்பாக்கம், சேத்துப்பட்டு அண்ணா நகர், வில்லிவாக்கம், பெசன்ட் நகர், திருவான்மியூர் உள்பட நகரின் பெரும்பாலான இடங்களில் கனமழை நீடித்தது. புறநகர் பகுதிகளிலும் மழைப்பொழிவு அதிகம் இருந்தது. இதனால் சாலைகளில் மழைநீர் தேங்கியது. வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர்.

மழையை எதிர்பார்க்காமல் ரெயின் கோட், குடை எடுத்து வராமல் வெளியே வந்தவர்கள் நனைந்தபடி சென்றனர். மழையில் நனைந்தால் உடல்நலம் பாதிக்கப்படும் என உணர்ந்து பலர் பேருந்து நிறுத்தங்கள் உள்பட சில இடங்களில் ஒதுங்கி, மழை சற்று ஓய்ந்த பின்னர் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.

நீண்ட நேரம் நீடித்த மழை காரணமாக நகரமே குளிர்ச்சியான காணப்பட்டது. இல்லங்களிலும் குளுமை நிலவியதால், பல வீடுகளில் நேற்றிரவு ஏ.சி., மின் விசிறிகளுக்கு ஓய்வு அளிக்கப்பட்டிருந்தது.

மழை காரணமாக நடைபாதை வியாபாரிகள் வியாபாரம் பாதித்து பரிதவிப்புக்கு உள்ளாகினர். சாலையோரம் வசிப்பவர்களும் எங்கே தஞ்சம் அடைவது என்று தெரியாமல் தவித்தனர். கனமழை காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சில இடங்களில் மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டது. மழை நின்ற பின்னர் மீண்டும் மின் இணைப்பு கொடுக்கப்பட்டது.

இந்த மழை இன்றும் (செவ்வாய்க்கிழமை) நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனைத்தொடர்ந்து சென்னை, செங்கல்பட்டு, காஞ்சீபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான அறிவிப்பை அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் தெரிவித்துள்ளனர்.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News