சிதம்பரம் தீட்சதர்கள் தொடர்பான வழக்கில் உயர் நீதிமன்றம் உத்தரவு

சிதம்பரம் தீட்சதர்கள் தொடர்பான வழக்கில் உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து உள்ளது.

Update: 2024-04-17 09:43 GMT

சென்னை உயர்நீதிமன்றம் (கோப்பு படம்)

சிதம்பரம் நடராஜர் கோவிலில் பொது தீட்சிதர்கள் குழந்தைத் திருமணங்கள் செய்வது குறித்து உடனுக்குடன் புகார் அளித்தால் மாவட்ட சமூக நல அதிகாரி நடவடிக்கை எடுப்பார் எனத் தெரிவித்த உயர் நீதிமன்றம், இதைத் தடுக்க இன்னொரு குழு எதற்கு என மனுதாரர் தரப்புக்கு கேள்வி எழுப்பியுள்ளது.

சிதம்பரம் நடராஜர் கோவிலில் பொது தீட்சிதர்கள் 12 முதல் 15 வயதுடைய குழந்தைகளுக்கு திருமணங்கள் செய்து வைப்பதால், குழந்தைத் திருமணங்களை தடுக்க, இந்து சமய அறநிலையத் துறை செயலாளர், ஆணையர், சமூக நலத்துறை செயலாளர், கடலூர் மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் அடங்கிய நிரந்தர கண்காணிப்பு குழுவை அமைக்க உத்தரவிட வேண்டும் என வழக்கறிஞர் எஸ்.சரண்யா என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கில் இந்து சமய அறநிலையத் துறை செயலாளர் மற்றும் ஆணையர் ஆகியோர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில்மனுவில், சிதம்பரம் நடராஜர் கோவிலில் தீட்சிதர்கள் குழந்தைகள் திருமணங்களை நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தீட்சிதர்களுக்கு எதிராக போக்சோ மற்றும் திருமண தடுப்புச் சட்டத்தில் வழக்குப் பதிவு செய்து, கைது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக தேசிய மனித உரிமை ஆணையம் அனுப்பிய நோட்டீசை தொடர்ந்து, மனித உரிமை ஆணையத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக விளக்கம் அளிக்கப்பட்டது.

குழந்தை திருமணம் தொடர்பாக அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாருக்கும், அறநிலையத் துறைக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும், அறநிலையத் துறை தரப்பில் தீட்சிதர்களுக்கு எதிராக எந்த புகாரும் கொடுக்கப்படவில்லை என்றும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி சத்தியநாராயண பிரசாத் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஏற்கெனவே மாவட்ட சமூக நல அதிகாரி உள்ள நிலையில், இன்னொரு குழு எதற்கு எனக் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், குழந்தை திருமணங்கள் குறித்து உடனுக்குடன் மாவட்ட சமூக நல அதிகாரியிடம் புகார் அளித்தால் அவர்கள் நடவடிக்கை எடுப்பார்கள் எனத் தெரிவித்தனர்.

இன்னொரு குழுவால் பிரச்னைக்கு தீர்வு காண முடியாது எனத் தெரிவித்த நீதிபதிகள், வழக்கில் தீட்சிதர்கள் தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை ஜூன் மாதத்துக்கு தள்ளிவைத்தனர்.

Tags:    

Similar News