1.3 கோடி தொலைதூர மருத்துவ ஆலோசனைகளை நிறைவு செய்தது இ-சஞ்சீவனி

தொலைதூர மருத்துவ ஆலோசனைகளை பெறுவதில் தமிழகம் உட்பட 10 மாநிலங்கள் முன்னணியில் உள்ளன

Update: 2021-10-05 05:25 GMT

மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் இ-சஞ்சீவனி திட்டம் இன்று 1.3 கோடி தொலைதூர மருத்துவ ஆலோசனைகளை நிறைவு செய்தது. இ-சஞ்சீவனி மத்திய அரசின் தொலைதூர மருத்துவ ஆலோசனை முயற்சி ஆகும். 

ஒவ்வொரு நாளும் சுமார் 90 ஆயிரம் நோயாளிகள் இந்த இ-சஞ்சீவனி தளத்தை பயன்படுத்தி மருத்துவ ஆலோசனை பெறுகின்றனர். இதில் இரு வகையான ஆலோசனைகள் உள்ளன. இ-சஞ்சீவனி ஏபி-எச்டபிள்சி ஆலோசனையில் மருத்துவர்கள் மருத்துவர்களிடம் ஆலோசிக்கின்றனர். இ-சஞ்சீவனி ஓபிடி பிரிவில் நோயாளிகள் மருத்துவரிடம் மருத்துவ ஆலோசனையைப் பெறுகின்றனர். இந்த சேவை கொரோனா தொற்றின் முதல் ஊரடங்கின் போது கடந்த 2020 ஏப்ரல் 13ம் தேதி தொடங்கப்பட்டது. இ-சஞ்சீவனி தளத்தில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருத்துவர்கள் தொலைதூர மருத்துவச் சேவை அளிக்கின்றனர்.

இந்த தொலைதூர மருத்துவ ஆலோசனைகளை பெறுவதில் தமிழகம் உட்பட 10 மாநிலங்கள் முன்னணியில் உள்ளன. ஆந்திர பிரதேசம் 42,23,054 ஆலோசனைகளை பெற்று முதல் இடத்தில் உள்ளது. கர்நாடகா 24,15,774 ஆலோசனைகளை பெற்று 2வது இடத்தில் உள்ளது. தமிழகம் 15,99,283 மருத்துவ ஆலோசனைகளை பெற்று 3வது இடத்தில் உள்ளது.



Tags:    

Similar News